ஒட்டகப் பால்ல டீ போடச் சொல்லி வடிவேலு ஏன் டீக்கடைக்காரரை அடிச்சார் தெரியுமா....?
சென்னை: ஒரு படத்தில் ஒட்டகப் பால்ல தான உன்னை டீ போடச் சொன்னேன் என்று கேட்டு டீக்கடைக்காரரை டென்ஷனாக்குவார் வடிவேலு. அது காமடெிக்காக... ஆனால் பசும்பாலை விட ஒட்டகப் பாலில்தான் நிறைய சத்துக்கள் உள்ளதாம். அதுவும் நம்பவே முடியாத அளவுக்கு பல நன்மைகள் ஒட்டகப் பாலில் இருக்கிறதாம்.
ஒட்டகப் பாலைப் போய் எப்படிப்பா குடிப்பது என்று கேட்கலாம். ஆனால் உண்மையில் பசும் பாலை விட ஒட்டகப் பால்தான் பெஸ்ட்டாம்.
ஒரு காலத்தில் ஒட்டகப் பாலை மட்டுமே நம்பி மனிதர்கள் வாழ்ந்துள்ளனர். உலகிலேயே பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஒட்டகங்கள்தான் தரம் வாய்ந்த ஒட்டக இனம் என்றும் கூறுகிறார்கள். இந்தப் பால் கிடைத்தால் பெஸ்ட் என்றும் சொல்கிறார்கள் நிபுணர்கள்.
மத்திய கிழக்கு நாடுகளில்
மத்திய கிழக்கு நாடுகளில் ஒட்டகப் பால்தான் பிரபலமானது. நம்ம ஊரில் பால் பண்ணைகள் ஏராளமாக இருப்பது போல அங்கு ஒட்டகப் பால் பண்ணைகள் அதிகம். தரமான ஒட்டகப் பால் அங்கு கிடைக்கும். நம்ம ஊரில் அது இன்னும் சட்டப்பூர்வமாக வரவில்லை.
ராஜஸ்தானில் கிடைக்கும்
அதேசமயம், ராஜஸ்தான் மாநிலத்தில் ரிபேரி சமூகத்தினர் ஒட்டகப் பாலை குடித்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் பசும்பாலை விட ஒட்டகப் பாலைத்தான் விரும்பி குடிக்கிறார்களாம்.
பசும்பாலை விட 3 மடங்கு விட்டமின் சி
ஒட்டகப் பாலில், பசும்பாலை விட 3 மடங்கு அதிக அளவில் விட்டமின் சி உள்ளது.
அதேபோல பசும்பாலை விட ஒட்டகப் பாலில் 10 மடங்கு அதிக இரும்புச் சத்து அதிகம் உள்ளதாம்.
கொலஸ்டிரால் குறைவு
பசும்பால் அல்லது ஆட்டுப் பாலை விட ஒட்டகப் பாலில் கொலஸ்டிரால் எனப்படும் கொழுப்புச் சத்து மிகவும் குறைவு.
விட்டமின் பி அதிகம்
அதேபோல ஒட்டகப் பாலில் விட்டமின் பி அதிகம் உள்ளது. மேலும் கரையாத கொழுப்பு அமிலமும் இதில் அதிகமாம்.
லேக்டோஸ் குறைவு
பசும்பாலை விட ஒட்டகப் பாலில் லேக்டோஸ் மிகவும் குறைவாம்.
தாதுக்கள் அதிகம்
ஒட்டகப் பாலில் மினரல் எனப்படும் தாதுக்கள் அதிகம். இம்யூனோகுளோபுளினும் அதிகம். இந்த இம்யூனோகுளோபுளின்தான் நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது ஒரு ஆண்டிபாடி ஆகும்.
ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு நல்லது
ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு ஒட்டகப் பால் நல்லதாம். அவர்களின் உடலில் ஆக்ஸிடேட்டிவ் ஸ்டிரஸ்ஸை இது குறைக்க உதவுகிறதாம். இந்த ஆக்ஸிடேட்டிவ் ஸ்டிரஸ்தான் பல நரம்பு சார்ந்த உபாதைகளுக்குக் காரணம். மேலும் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு ஒட்டகப் பாலைக் கொடுத்து ஆய்வு மேற்கொண்டபோது அவர்களின் செயல்பாட்டிலும் கூட நல்ல மாற்றங்கள் தெரிந்ததாம்.
மூளையை சிறப்பாக்கும்
மேலும் மூளையின் இயக்கத்தையும் இந்த ஒட்டகப் பால் சீராக செயல்பட வைக்கும் தன்மை கொண்டதாம்.
சர்க்கரை நோய் - மலேரியாவுக்கும் பெஸ்ட்
சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஒட்டகப் பாலை அருந்தினால் அவர்களின் ரத்தத்தில் சர்க்கரை அளவு மட்டப்படும் என்கிறது பீகானிரில் உள்ள சர்க்கரை நோய் ஆய்வு மையத்தின் ஆய்வறிக்கை. அதேபோல மலேரியாவையும் இது குணப்படுத்தும் தன்மை கொண்டதாம்.
லேசா உப்புக் கரிக்கும்.. அம்புட்டுதான்!
வழக்கமாக பசும்பால், எருமைப் பால் ஆட்டுப் பால் ஆகியவை லேசான இயற்கை சுவையுடன் இருக்கும். ஆனால், ஒட்டகப் பால் அப்படி இல்லை. மாறாக லேசாக உப்புக் கரிக்கும். அதேசமயம், பசும்பாலை விட மிகவும் அடர்த்தி குறைவாக காணப்படும். மொட்டத் தண்ணீர் போலக் கூட இது சமயங்களில் காணப்படும். ஆனால் செம சத்துக்களை உள்ளடக்கிய பால் இது.
கறந்ததும் குடிச்சா நல்லது
ஒட்டகப் பாலை, பசும் பாலைப் போல வைத்திருந்து குடிக்கக் கூடாது. மாறாக, கறந்தோமா, காய்ச்சினோமா குடிச்சோமா என்று இருக்க வேண்டும். அப்போதுதான் சத்துக்கள் குறையாமல் அப்படியே கிடைக்குமாம்.
குடிச்சா நல்லாதான் இருக்கும்.. ஆனால் ஒட்டகத்துக்கு எங்கே போறது!