‘செவாலியே’ சிவாஜிக்கு நிஜவாழ்வில் நடிக்கத் தெரியவில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்
சென்னை: திரையில் நடிக்கத் தெரிந்தது போல் நிஜவாழ்க்கையிலும் நடித்திருந்தால் சிவாஜி அரசியலிலும் ஜெயித்திருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
நேற்று மாலை சிவாஜியின் 86வது பிறந்த நாள் விழா சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்றது. சிவாஜியின் மகன்களான ராம்குமார் மற்றும் பிரபு ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவில், பத்மபூஷண் பத்மா சுப்ரமணியன், பாடகி ஜமுனா ராணி, நடிகை விஜயகுமாரி, நடிகர்கள் வி.எஸ்.ராகவன், சி.ஆர். பார்த்திபன் ஆகியோருக்கு சிவாஜி கணேசன் நினைவு விருதுகளை வழங்கினார் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.
அதனைத் தொடர்ந்து விழாவில் அவர் பேசியதாவது :-
நிஜவாழ்க்கையிலும்...
திரையில் நடிக்கத் தெரிந்தது போல் நிஜ வாழ்க்கையில் நடிக்கத் தெரிந்திருந்தால் அரசியலிலும் அவர் ஜெயித்திருக்கலாம்.
சிவாஜி என்ற பட்டத்தோடு...
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏற்படுகிற இன்ப துன்பங்களை திரைப்படம் மூலம் நடித்துக் காட்டியவர் சிவாஜி. நாடகங்கள் மூலம் நடித்துப் பாராட்டப்பட்டு ‘சிவாஜி' என்கிற பட்டத்தோடு சினிமாவுக்கு வந்தார்.
பாரதியை கண் முன் காட்டியவர்...
1952-ல் வெளிவந்த பராசக்தி என்கிற முதல் படத்திலேயே அவரது திறமையை வெளிப்படுத் தினார். வீரபாண்டிய கட்டபொம்மன் முதல், சுதந்திரப் போராட்டத் தியாகிகளான வ.உ.சிதம்பரனார், பாரதியார், பகத்சிங், திருப்பூர் குமரன் உள்ளிட்டோரை நாம் பார்த்த தில்லை. இவருடைய படத்தைப் பார்த்துதான் தெரிந்து கொண்டோம்.
சிறந்த வில்லன்...
சிறந்த கதாநாயகனாக மட்டு மல்ல, ரங்கூன் ராதா, திரும்பிப் பார் போன்ற படங்களில் சிறந்த வில்லனாகவும் கோலோச்சியவர் சிவாஜி.
நடிப்பு பல்கலைக்கழகம்...
அவரது உடலின் அனைத்து அவயங்களும் நடித்தன. இன்றைய நடிகர்கள் நடிப்பைக் கற்றுக் கொள்வதற்கு, சிவாஜி ஒரு பல்கலைக் கழகமாகத் திகழ்கிறார்..
சிவாஜிக்கு சிறப்பு...
அவருடைய பிறந்த நாளை கலையுலக விழாவாக நடிகர் சங்கம் ஆண்டுதோறும் கொண்டாடி விருதுகள் வழங்க வேண்டும். நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகருக்கு அதுவே சிறப்பு செய்வ தாக இருக்கும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.