”ஓட்டுக்காக ஒரு போதும் விலை போகாதீர்கள்” - வைகோ உருக்கம்
கோவில்பட்டி: "உங்களுக்காக உழைப்பவர் யார் என்று பாருங்கள். ஓட்டுக்காக பணத்திற்கு விலை போகாதீர்கள்" என கடைசி கட்ட பிரசாரத்தில் வைகோ உருக்கமாக தெரிவித்தார்.
தூத்துக்குடி தொகுதி மதிமுக வேட்பாளர் ஜோயலுக்கு வாக்கு கேட்டு கடைசி கட்ட பிரசாரத்தில் இருந்த வைகோ, " தமிழகத்தில் பள்ளியில் படிக்கிற மாணவர்கள் கூட சீரழி்ந்து விட்டனர். சில வாரங்களுக்கு முன்பு சென்னை அருகே தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பெண்ணை 4 பேர் பலத்காரம் செய்து படுகொலை செய்தனர்.
இதனால் தமிழகத்தில் பெண்கள் அச்சத்தில் தான் வாழ்ந்து வருகின்றனர். குஜராத் முதல்வர் மோடி்யிடம் சென்ற பொருளாதார நிபுணர்கள் மதுகடைகளை திறந்தால் 20 ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கும் என்று தெரிவித்தனர். 1 லட்ச கோடி ரூபாய் கிடைத்தாலும் அதை மோடி ஏற்க மாட்டான் என்று அவர் கூறியுள்ளார்.
எனது மாநிலத்தில் பெண்களை கண்ணீர் விட அனுமதிக்க மாட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது. தமிழகத்தில் பாஜக, தேமுதிக, மதிமுக, பாமக என வலுவான கூட்டணி அமைந்துள்ளது. பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 39 இடங்களிலும் அருதிபெரும்பான்மையுடன் வெற்றி பெறும்.
வாக்களிப்பதற்காக விலை போகாதீர்கள். இன்றைக்கு 500 ரூபாயின் மதிப்பு வெறும் 27 காசுகள்தான். 1000 ரூபாயின் மதிப்பு வெறும் 54 காசுதான் மதிப்பாக உள்ளது.
இன்னும் 5 ஆண்டுகளுக்கு உங்களுக்காக உழைப்பது யார் என்று பாருங்கள். மதிப்பில்லாத பணத்திற்கு விலை போகாமல் ஜனநாயகத்தை காப்பாற்ற தூத்துக்குடி தொகுதி வேட்பாளர் ஜோயலுக்கு வாக்களியுங்கள்" என்று வைகோ உருக்கமாக தெரிவித்து தனது பிரச்சாரத்தை முடித்து கொண்டார்.