ரம்ஜான் திருநாளில் சமூக ஒற்றுமை தழைக்க சூளுரை ஏற்போம்: வைகோ
சென்னை: சமய நல்லிணக்கமும், சகோதரத்துவமும் நிலைநாட்டப்படவும், சமூக ஒற்றுமை தழைக்கவும் பாடுபடுவோம் என சூளரைப்போம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது ரம்ஜான் திருநாள் வாழ்த்துச் செய்தியில், கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
"உலகமெலாம் வாழும் இஸ்லாமிய பெருமக்கள் தங்களின் ஐம்பெரும் கடமைகளுள் ஒன்றான ரமலான் நோன்பு நோற்பதை, புனித ரமலான் மாதத்தின் முப்பது நாட்களிலும் பொழுது புலரும் வேளையில் இருந்து அந்தி சாயும் நேரம் வரை பசி பொறுத்து உணவு உண்ணாமல், தாகத்தைத் தாங்கி தண்ணீர் அருந்தாமல் புலன்களை இச்சைகளைக் கட்டுப்படுத்தி நோன்பு தவம் இருத்தலின் நிறைவு செய்யும் நன்னாள்தான் ஈகை திருநாளான ரமலான் ஈது பெருநாள் ஆகும்.
ஏழை, எளிய மக்களுக்கு ஜக்காத் என்னும் நன்கொடைகளை வாரி வழங்கி, ஈதல் இசைபட வாழ்தல் எனும் விதத்தில் ஈத்துவக்கும் மகிழ்ச்சியில் இஸ்லாமிய பெருமக்கள் திளைக்கின்றனர்.
அண்ணலார் நபிகள் நாயகம் காட்டிய நெறிகளை ஏற்று வாழும் இஸ்லாமிய பெருமக்கள் கொண்டாடுகிற ரமலான் திருநாளில் சமய நல்லிணக்கமும், சகோதரத்துவமும் நிலைநாட்டப்படவும், சமூக ஒற்றுமை தழைக்கவும் பாடுபடுவோம் எனச் சூளுரைத்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இனிய ரமலான் வாழ்த்துக்களை இஸ்லாமிய பெருமக்களுக்கு தெரிவித்துக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்" என்று வைகோ தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
வேல்முருகன் ரமலான் வாழ்த்து
இதேபோல் தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில், ஈகைத் திருநாள் எனப்படும் ரமலான் பெருநாளை கொண்டாடுகிற இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இஸ்லாமிய உறவுகளின் புனிதக் கடமைகளில் ஒன்றாக ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. அன்பு, ஈகை, நல்லிணத்துக்குடன் வாழ வேண்டும் என்பது நபிகள் நாயகத்தின் போதனை. இதை நாம் என்றென்றும் கடைபிடிக்க ரமலான் திருநாளில் உறுதியேற்போம்.
ரமலான் பெருநாளில் ஈழத்தில், பாலஸ்தீனத்தில் என இஸ்லாமிய உறவுகள் வேட்டையாடப்படுகிற பெருந்துயரம் முடிவுக்கு வரவும் பிரார்த்திப்போம். மனித நேயம் மலரவும் ஒடுக்கப்படுகிற மக்கள் தங்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க குரல் கொடுக்கவும் இந்த ரமலான் திருநாளில் சூளுரைப்போம்.
அண்ணல் நபிகள் நாயகத்தின் நெறிகளை ஏற்று சகோதரத்துவமும் சமூகங்களிடையேயான ஒற்றுமை நிலைக்கவும் ரமலான் திருநாளில் உறுதியேற்போம்.
இந்நன்னாளில் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் ரமலான் வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.