காங்கிரஸ் அரசை கடைசி வரை எதிர்த்தவர் முத்துராமலிங்கத் தேவர்: வைகோ
ராமநாதபுரம்: சுதந்திரப் போராட்ட வீரரான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் காங்கிரஸை கடைசி வரை எதிர்த்தார். அவர் இன்று இருந்திருந்தால் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட்டிருப்பார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
முத்துராமலிங்கத் தேவரின் 106ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். தி.மு.க. சார்பில் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோவும் 38ஆவது வருடமாக தேவரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளரிடம் பேசியதாவது:
இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழக மக்களுக்கு எதிராக செயல்படுகிறது காங்கிரஸ் அரசு. சுதந்திரப் போராட்ட வீரரான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் காங்கிரஸை கடைசி வரை எதிர்த்தார். அவர் இன்று இருந்திருந்தால் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட்டிருப்பார்.
இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தி போர்க்குற்றவாளி ராஜபட்சவுக்கு அங்கீகாரம் அளிப்பது ஒன்றே மத்தியில் ஆளும் காங்கிரஸின் நோக்கமாக உள்ளது. எனவே, காங்கிரஸ் அரசை வீழ்த்துவதே முதல் நோக்கம் என்றார்.
இந்த விழாவில் மதிமுக மாவட்டச் செயலாளர்கள் மதுரை மாநகர்-புதூர் மு.பூமிநாதன், சிவகங்கை-புலவர் செவந்தியப்பன், மதுரை புறநகர் கிழக்கு-வீர தமிழ்ச்செல்வன், மதுரை புறநகர்மேற்கு-முனியாண்டி, தேனி சந்திரன், திண்டுக்கல் என்.செல்வராகவன், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் எம்.டி.சின்னசெல்லம், கொள்கை விளக்க அணிச் செயலாளர் க.அழகுசுந்தரம், மாணவர் அணிச் செயலாளர் தி.மு.இராசேந்திரன், தொண்டர் அணிச் செயலாளர் ஆ.பாஸ்கரசேதுபதி, மாநில மருத்தவர் அணி துணைச் செயலாளர் டாக்டர் பி.சரவணன் ஆகியோரும் கழக முன்னணியினரும் தோழர்களும் உடன் உள்ளனர்.