தமிழர் விரோத போக்கு... உங்க ஓனரே வந்தாலும் பேட்டி தர முடியாது: "டைம்ஸ் நவ்"க்கு வைகோ பதிலடி!!
விருதுநகர்: தமிழர்களுக்கு எதிராக செய்தி வெளியிடுவதால் டைம்ஸ் நவ் ஆங்கில சேனலுக்கு பேட்டியளிக்க முடியாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வைகோவின் ஃபேஸ்புக் பக்கத்தில் மதிமுக ஆதரவாளர் ஒருவர் பதிவு செய்துள்ள தகவல்:
வைகோ நேற்று விருதுநகரில் இருந்து சூரன்பட்டி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். இடையில் வழிமறித்த டைம்ஸ் நவ், பத்திரிகை பெண் நிருபர் வைகோவிடம் பேட்டி எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.
ஆனால் பேட்டியளிக்க வைகோ மறுப்பு தெரிவித்துவிட்டார். தொலைக்காட்சி உரிமையாளரே வைகோவிடம் பேட்டியெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளதால் பேட்டியளிக்கும்படி நிருபர் கேட்டுக்கொண்டாராம்.
இதன்பிறகு காரில் இருந்து இறங்கிய வைகோ, உங்கள் தொலைக்காட்சி, தமிழர்களுக்கு எதிராக செய்திகளை ஒளிபரப்புகிறது. ஈழத்தமிழர் போராட்டத்தை கொச்சைப்படுத்தி விடுதலை புலிகளை தீவிரவாதிகளாக சித்தரித்து செய்தி ஒளிபரப்புகிறது.
ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று சொல்கிறது, காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு கர்நாடகா துரோகம் இழைக்கவில்லை என்று செய்தி வெளியிடுகிறது. பாஜக கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெறாது என்றும் சொல்கிறது.
இப்படி தமிழினத்திற்கு துரோகம் செய்வதற்காகவே ஊடகம் நடத்தி கொண்டு இருக்கும் உங்கள் நிறுவனத்துக்கு பேட்டி அளிக்க முடியாது. டைம்ஸ் நவ் ஊடகத்தின் நிறுவனர் வந்து கேட்டாலும் பேட்டி அளிக்க முடியாது.. உண்மையான செய்திகளை முதலில் வெளியிடுங்கள் என்று கூறிவிட்டு காரில் ஏறி சென்றுவிட்டாராம்.
இவ்வாறு பேஸ்புக்கில் உரையாடல் தெரிவிக்கப்பட்டுள்ளது.