ராஜபக்சேவை விசாரிக்க விசாரணை கமிஷன் வைப்போம்: வைகோ பேச்சு
விருதுநகர்: நரேந்திரமோடி தலைமையில் மத்தியில் பாஜக கூட்டணி அரசு பொறுப்பேற்றால் இலங்கை இனப்படுகொலைக்கு காரணமாக அந்த நாட்டு அதிபர் ராஜபக்சே மீது விசாரணை நடத்த கமிஷன் ஏற்படுத்தப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது மதிமுக. அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். தொகுதிக்குட்பட்ட சாத்தூர் நகராட்சியில் பிரச்சாரம் நடத்திய வைகோ பேசுகையில்,
இலங்கையில் இனப்படுகொலை நடந்துள்ளது. அதற்கு காரணமாக இருந்த அந்த நாட்டின் அதிபர் ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டியவர். மத்தியில் நரேந்திரமோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தால், ராஜபக்சே மீது விசாரணை நடத்த கமிஷன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நான் ஏற்கனவே கூறியபடி என்னை தோற்கடிக்க வாக்காளர்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்க சதி நடக்கிறது. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயலுபவர்களுக்கு தண்டனை அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு வைகோ பேசினார்.