ராஜ்நாத் சிங்குடன் வைகோ சந்திப்பு- ராஜ்யசபா சீட் தருகிறது பாஜக? 'மச்சானுக்கு' பொன்னார் லாபி?
டெல்லி/ சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் தோல்வியை சந்தித்த போதும் கூட்டணிக் கட்சிகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் ஆகியோருக்கு ராஜ்யசா சீட்டுகளை பாஜக வழங்க திட்டமிட்டுள்ளது. டெல்லியில் இன்று தம்மை சந்தித்த வைகோவிடமும் ராஜ்நாத்சிங் இதற்கான உறுதிஅளித்ததாக கூறப்படுகிறது. அதேபோல் சுதீஷுக்கு எப்படியும் ராஜ்யசபா சீட் பெற்றுத் தந்துவிடுவது என்பதற்காக தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் டெல்லியில் முகாமிட்டு லாபியில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக ஒரு புதிய அணியை உருவாக்கியிருக்கிறது பாஜக. லோக்சபா தேர்தலை முன்வைத்து பாமக, தேமுதிக, மதிமுக ஆகிய கட்சிகளை தம் வசமாக்கிக் கொண்டது பாஜக.
இந்த அணியின் மூலம் தமிழகத்தில் கண்டு கொள்ளப்படாத கட்சியாக இருந்த நிலைமையை மாற்றி தவிர்க்க முடியாத சக்தியாக்கிவிட்டது பாஜக.
சட்டசபை தேர்தலுக்கும் ..
இதே கூட்டணி சட்டசபை தேர்தலை எதிர்கொண்டால் நிச்சயம் திமுகவுக்கு பெரும் நெருக்கடியாகவே இருக்கும்.
ராஜ்யசபா சீட்டுகள்
இதனால் கூட்டணிக் கட்சிகளை தக்க வைத்துக் கொள்ளும் எண்ணத்தில் மதிமுக, தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டுகளை வேறு மாநிலங்களில் இருந்து பாஜக வழங்கலாம் என்கிறார்கள்.
தியாகி வைகோ
அதுவும் பாஜக தலைமையிலான வலுவான கூட்டணி அமைய முதலில் துண்டு போட்டு இடம் பிடித்தவர் வைகோ. அத்துடன் பாமக, தேமுதிகவுக்கு அதிக சீட்டுகளை முடிந்த வரை விட்டுக் கொடுத்து ஒரு தியாகியாகவே பாஜக அணியில் வலம் வந்தவர் வைகோ.
சுதீஷூக்கு
அவர் தொடர்ந்து தோல்வியைத் தழுவி வரும் நிலையில் ஆறுதல் சொல்லும் வகையில் வைகோவை பாஜக ராஜ்யசபா எம்.பியாக்கலாம் என்கிறார்கள். அதேபோல்தான் தமிழக கூட்டணியில் பெரிய கட்சியான தேமுதிகவுக்கு மரியாதை கொடுக்கும் வகையில் சுதீஷூக்கும் ராஜ்யசபா எம்.பி சீட் கொடுக்க முன்வரலாம் பாஜக.
இதைத் தான் ஜெயலலிதாவும் விரும்புவார்...
இதன்மூலம் இந்தக் கூட்டணியை வரும் சட்டமன்றத் தேர்தல் வரை கட்டிக் காக்க பாஜக முயலலாம். இதைத் தான் முதல்வர் ஜெயலலிதாவும் விரும்புகிறார்.. இந்தக் கூட்டணி இருக்கும் வரை எதிர்க் கட்சி வாக்குகள் பிரிவதை தடுக்க முடியாது. இதனால் திமுக, பாஜக கூட்டணிகள் வாக்கைப் பிரிக்க சட்டமன்றத் தேர்தலிலும் ஈசியாக மீண்டும் வெற்றியைக் காணலாம் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் விருப்பத்தை பாஜக நிறைவேற்றும்...
ஜெயலலிதாவுக்கு உதவும் வகையில் தனது கூட்டணியை பாஜக கட்டி வைத்திருக்க முயலும் என்றே தெரிகிறது. இதற்குப் பிரதிபலனாக மத்திய அரசுக்கு ராஜ்யசபா உள்ளிட்ட விஷயத்தில் ஜெயலலிதா அனுசரணையாக இருக்க வாய்ப்புள்ளது. இதனால் கேப்டனின் முதல்வர் கனவு முடிவுக்கு வருகிறது.
டெல்லியில் வைகோ
மேலும் டெல்லியில் இன்று மதிமுக பொதுச்செயலர் வைகோ ராஜ்நாத்சிங்கை சந்தித்துப் பேசினார். இது தொடர்பாக மதிமுக தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில், நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மாபெரும் வெற்றி பெற்றதையொட்டி, இன்று வைகோ, பா.ஜ.க. தேசியத் தலைவர் ராஜ்நாத்தை சந்தித்து வாழ்த்துக்கூறினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சந்திப்பின் போது வைகோவின் தியாகத்தை பொறுமையை பாராட்டிய ராஜ்நாத்சிங் வேறு ஒரு மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக்குகிறோம் என்றும் உறுதியளித்ததாகவும் தெரிகிறது.
பொன்னார் முகாம்
அதேபோல் டெல்லியில் தமிழக பாஜக தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் முகாமிட்டிருக்கிறார். அவர் இன்று மோடியை சந்தித்து பேச இருக்கிறார்.
சுதீஷுக்காக லாபி
மோடியுடனான சந்திப்பின் போது சுதீஷை ராஜ்யசபா எம்.பி.யாக்குவது பற்றி பேச இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.