சிறப்புடன் செயல்படுங்கள் தமிழிசை.. வைகோ வாழ்த்து
சென்னை: பன்முகத் திறன் கொண்ட டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், பாஜக தலைவராக சிறப்புடன் செயல்பட வாழ்த்துவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக சகோதரி திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், அக்கட்சியின் அகில இந்தியத் தலைமையால் அறிவிக்கப்பட்ட செய்தி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
தன் பேச்சு ஆற்றலாலும், கட்சிப் பணிகளாலும் அனைவரின் மதிப்பையும் பாராட்டுகளையும் பெற்றுள்ள சகோதரி தமிழிசை அவர்கள், அக்கட்சியின் அகில இந்திய தேசியச் செயலாளராகவும் சிறப்பாகப் பணி புரிந்தார். மருத்துவத் துறையிலும் சிறந்த சேவை செய்து வருகிறார்.
அவரது அருமைத் தந்தையார் இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்கள் வழியிலேயே தமிழ் மொழி, தமிழ் இனம் மீது எல்லையற்ற பற்றும் அதற்குத் தொண்டு ஆற்றும் அர்ப்பணிப்பு உணர்வும் மிக்கவர். அரசியல், சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளில் ஆழ்ந்த புரிதலும், மதிநுட்பம் கொண்டு வாதாடும் வல்லமையும் கொண்டவர். அனைவரிடத்திலும் அன்பு பாராட்டி, இனிய இயல்புடன் பழகுகின்ற பண்புகள் நிறைந்தவர்.
இத்தகைய பன்முகத் திறன் வாய்ந்த சகோதரி திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் பொறுப்பில் சிறப்பாகச் செயல்பட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன்.
பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தேசியச் செயலாளராக சகோதரர் எச். ராஜா அவர்கள் அறிவிக்கப்பட்டதும்
மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களுக்கும் உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
இதேபோல டாக்டர் தமிழிசை மற்றும் எச். ராஜாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் வைகோ வாழ்த்து தெரிவித்தார்.