ஓட்டலில் திருட முயன்ற திருடர்கள் - தர்மஅடி கொடுத்து போலீசில் பிடித்துக் கொடுத்த வாலிபர்கள்
சேலம்: பேளூர் பகுதியில் ஓட்டலில் திருட முயற்சித்த 3 வாலிபர்களை அப்பகுதி மக்களே பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த பேளூரில் நேற்று இரவு மர்மநபர்கள் சிலர் பஸ்நிலைய பகுதிகளில் உள்ள ஓட்டலில் திருட முயற்சித்துள்ளனர். மர்மநபர்கள் நடமாட்டம் பற்றி தகவலறிந்த அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, அவர்களைத் தேடும் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது சோளக்காட்டிலிருந்து மறைந்திருந்த கோவிந்தன் (25) என்ற வாலிபர் அவர்களிடம் சிக்கினார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பேளூர் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் குமார், குமரேஷ் ஆகியோருடன் சேர்ந்து ஓட்டல்களில் திருட திட்டமிட்டது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் மூன்று பேரையும் அங்கிருந்த கோவிலில் கட்டி வைத்தனர். தகவலறிந்து விரைந்து வந்த வாழப்பாடி போலீசார், பொதுமக்களால் தாக்கப்பட்டு கட்டி வைக்கப்பட்டிருந்த 3 வாலிபர்களையும் மீட்டு விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில் பிடிபட்ட கோவிந்தன் ஏற்கனவே வேறொரு திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்பது கண்டுபிடிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்தனர்.