ஜூவில் இருக்க வேண்டிய சிங்கம், சிறுத்தை வெளியில் நடமாடுவதால்.. வண்டலூர் மக்கள் அச்சம்
சென்னை: சென்னை வண்டலூரை அடுத்த ஊரப்பாக்கம் குடியிருப்புப் பகுதியில் சிங்கம், சிறுத்தைப் புலி நடமாட்டம் பற்றி எழுந்துள்ள சந்தேகத்தை அடுத்து அப்பகுதியில் கண்காணிப்பு கேமராவை வனத் துறையினர் பொருத்தியுள்ளனர்.
ஊரப்பாக்கத்தை அடுத்த மதுரை மீனாட்சிபுரம் பகுதியில் சிங்கம் நடமாட்டம் இருப்பதாக மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மீனாட்சிபுரத்தை ஒட்டிய, காப்புக் காடுகளில் இரவு நேரத்தில் மான் போன்ற விலங்குகளை விரட்ட வந்த மர்ம விலங்கு அங்கு குடியிருப்புப் பகுதிக்கு வந்து சென்றதாகவும், இருட்டில் அது சிங்கம் போன்று இருந்ததாகவும் அதனால் மக்கள் அங்கிருந்து அலறியடித்து ஓடியுள்ளனர்.
மேலும் குடியிருப்புப் பகுதியிலும் மர்ம விலங்கு வந்து சென்றதைப் பார்த்தாகவும் விலங்கின் கால்தடம் பெரியதாக இருப்பதால் அது சிங்கமாக இருக்கலாம் எனவும் மக்கள் வனத் துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து வனத் துறையினர் அப்பகுதிக்குச் சென்று விலங்கின் கால்தடத்தை புகைப்படம் எடுத்து அப்பகுதியில் நடமாடும் விலங்கு சிறுத்தையா அல்லது சிங்கமா என ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
மேலும் மர்ம விலங்கை கண்டதாக கூறும் மீனாட்சிபுரம் குடியிருப்புப் பகுதியில் உள்ள மின் கம்பத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளனர்.
இதற்கிடையில் சர்க்கஸ் நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட சிங்கம், புலி ஆகிய விலங்குகள் வண்டலூர் உயிரியல் பூங்கா அருகில் உள்ள விலங்குகள் மீட்பு, ஓய்விடங்களில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
அப்பகுதியில் உள்ள சுற்றுச் சுவர் உயரம் குறைந்ததாக இருப்பதால் அந்த வழியாக சிங்கம் உள்ளிட்ட விலங்குகள் தப்பியிருக்கலாம் என கிராம மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
மொத்தத்தில் நடமாடுவது சிங்கமா, சிறுத்தையா என்பதை கண்டறிந்து அதைப் பிடிக்க அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டால் நல்லது என்று மக்கள் கூறுகிறார்கள்.