வண்டலூர் "ஜூ"வில் "நீர் நாய்கள்" – பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு!
சென்னை: சென்னை அருகே வண்டலூரில் அமைந்துள்ள உயிரியல் பூங்காவில் நீர்நாய்கள் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றுப்பகுதியில் 2 நீர்நாய் பச்சிளம் குட்டிகள் தாயின் துணை இன்றி மிகவும் சோர்வடைந்த நிலையில் மீட்கப்பட்டன. அந்த குட்டிகள் ஒரு ஆண், ஒரு பெண் ஆகும்.
அந்த 2 நீர்நாய் குட்டிகளும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு கொண்டுவரப்பட்டது.
முதலுதவி சிகிச்சை:
அவற்றை பெற்றுக்கொண்ட வண்டலூர் பூங்கா மருத்துவர்கள், உடனடியாக குட்டிகளுக்கு பூங்கா விலங்குகள் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
2 குட்டிகளுக்கும் குளுக்கோஸ்:
பின்னர் 2 குட்டிகளுக்கும் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. மேலும் வைட்டமின் மற்றும் சத்து மருந்துகளும் கொடுக்கப்பட்டது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பால் தருவிக்கப்பட்டு குட்டிகளுக்கு தொடர்ச்சியாக வழங்கப்பட்டது.
செயற்கை நீர்த்தொட்டியில் வளர்ப்பு:
இதனால் குட்டிகள் ஆபத்து நிலையில் இருந்து காப்பாற்றப்பட்டன. இந்த 2 நீர்நாய் குட்டிகளும் பூங்கா விலங்கு மருத்துவமனையில் செயற்கையாக உருவாக்கப்பட்ட நீர்த்தொட்டியில் வைத்து கைவளர்ப்பு மூலம் வளர்க்கப்பட்டன.
8 கிலோ எடை:
இந்த குட்டிகள் ஒவ்வொன்றுக்கும் தற்போது நாள்தோறும் 1 கிலோவிற்கு மேலான மீன்கள் உணவாக வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு குட்டியும் தற்போது 8 கிலோ எடை உள்ளன.
பொதுமக்கள் பார்வைக்கு:
குட்டிகள் நன்கு வளர்ந்து தானே இரைத்தேடி உயிர்வாழும் நிலைக்கு வளர்ந்து விட்டன. இதையடுத்து 2 நீர்நாய் குட்டிகளும் பூங்காவில் உள்ள நீர்நாய் இருப்பிடத்தில் நேற்று முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்பட்டன.
இந்த நீர்நாய் குட்டிகளை பார்வையாளர்கள் பார்த்து கண்டுகளிக்கலாம்.