வடகிழக்கு மாகாணங்கள் இணைப்பு மூலமே ஈழத் தமிழர் அச்சமின்றி வாழ முடியும்: வரதராஜ பெருமாள்
கோயம்புத்தூர்: இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மீண்டும் இனைப்பதன் மூலம் மட்டுமே ஈழத் தமிழர்கள் அச்சமின்றி வாழ முடியும் என்று வடகிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் வரதராஜ பெருமாள் கூறியுள்ளார்.
1987-ல் இந்தியா-இலங்கை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதன்படி ஈழத் தமிழர்கள் வாழும் வடகிழக்கு மாகாணத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில் இலங்கையின் அரசியல் சாசனத்தின் 13வது பிரிவில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.
ஆனால் இந்தியா- இலங்கை ஒப்பந்தத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்கவில்லை. இதனால் இந்திய அமைதிப் படை உதவியுடன் ஈ.பி.ஆர்.எல். இயக்கத்தைச் சேர்ந்த வரதராஜப் பெருமாளை முதல்வராகக் கொண்டு வடகிழக்கில் ஒரு பொம்மை அரசை அப்போதைய இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி உருவாக்கினார்.
இந்தியாவுக்கு தப்பி வந்த வரதராஜ பெருமாள்
பின்னர் 1990ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படைகள் இலங்கையில் இருந்து வெளியேறிய போது வரதாரஜப் பெருமாளும் இந்தியாவுக்கு தப்பி ஓடிவந்தார். ஒடிஷாவிலும் ராஜஸ்தானிலும் தலைமறைவாக இருந்து வந்த வரதராஜ பெருமாள் பின்னர் டெல்லியில் தங்கி இருந்தார்.
தலைமறைவு வாழ்க்கை
ஆனாலும் கடந்த கால் நூற்றாண்டு காலமாக ஈழத் தமிழர் பிரச்சனை பற்றி அவர் பேசுவதே இல்லை.அவரை யாரும் கண்டு கொள்வதாகவும் இல்லை என்ற நிலை இருந்து வந்தது.
கோவையில் பிரஸ்மீட்
இந்த நிலையில் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்த வரதராஜப் பெருமாள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக மீனவர் பிரச்சினையை பொறுத்தமட்டில் இரு அரசுகளும் சுமுகமான முறையில் ஓப்பந்தம் ஏற்படுத்த வேண்டும். தமிழக மற்றும் இலங்கை மீனவர்கள் இருநாட்டு கடல் பகுதிகளில் மீன்பிடிக்க வழிவகை செய்ய வேண்டும்.
பழைய மீன்பிடி முறை
ஆழப்பகுதியில் விசைப்படகு மூலம் மீன் பிடிப்பதால் மீன்வளம் பாதிக்கப்படுகிறது. எனவே பழைய மீன்பிடி முறையை இருதரப்பினரும் அமல்படுத்த வேண்டும். இலங்கையில் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணத்தை பொறுத்த மட்டில் இலங்கை அரசு 13வது சட்ட திருத்தத்தை தவறான முறையில் நிறைவேற்றியுள்ளது.
மாகாணங்கள் இணைப்பு
இரு மாகாணத்தை சேர்ந்த மக்கள் குரல் கொடுத்தால் மட்டுமே ஒரே மாகாணமாக இணைந்து வளர்ச்சியை அடைய முடியும். அப்பொழுதுதான் தமிழர்கள் இலங்கையில் பயமின்றி வாழ முடியும்.
இவ்வாறு வரதராஜ பெருமாள் கூறியுள்ளார்.