விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர்கள்- திருமா. மீண்டும் சிதம்பரத்தில் போட்டி- திருவள்ளூரில் ரவிக்குமார்
சென்னை: லோக்சபா தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது.
16வது லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது, அதன்படி ஏப்ரல் 24ம் தேதி ஒரே கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையின் 40 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.
திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் தொகுதியும், திருவள்ளூர் தொகுதியும் ஒதுக்கப் பட்டது. இதனைத் தொடர்ந்து இத்தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளார்களை அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று சென்னையில் அறிவித்தார்.
இது தொடர்பாக சென்னையில் சென்னையில் இன்று செய்தியாளார்களைச் சந்தித்த திருமாவளவன், ‘சிதம்பரம் தொகுதியில் தான் மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும், திருவள்ளூர் தனித் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் நிறுத்தப் படுவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், மத்தியில் மதச்சார்பற்ற அரசு அமைந்தால் தான் சமூக பாதுகாப்பு சாத்தியமாகும். பாஜகவால் மதச்சார்பற்ற ஆட்சியைத் தர இயலாது. தமிழகத்தில் திமுக கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணியாக உள்ளது. இக்கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என அவர் உறுதி படத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு திருமாவளவன் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.