2016 சட்டசபை தேர்தலுக்குள் புதிய டிவி சேனல் துவங்கும் திருமாவளவன்
சென்னை: 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு என்று தனியாக தொலைக்காட்சி சேனல் துவங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஊடக மையம் சென்னை அசோக் நகரில் உள்ள 100 அடி சாலையில் கட்டப்பட்டுள்ளது. வெளிச்சம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த 3 அடுக்கு மாடி கட்டிடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி கட்டிடத்தை திறந்து வைத்தார்.
கட்டிடத்தின் நிலவொளி என்று பெயரிடபப்பட்ட முதல் மாடியை கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனை செல்வன் திறந்து வைத்தார். கதிரொளி என்ற 2வது மாடியை
மற்றொரு பொதுச் செயலாளர் ரவிக்குமார், அரவொளி என்ற 3வது மாடியை பொருளாளர் முகமது யூசுப் ஆகியோர் திறந்து வைத்தனர்.
கட்டிடத்தில் உள்ள மார்பளவு அம்பேத்கார் சிலையை திறந்து வைத்த திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
எந்த கட்சிக்கும் ஊடக மையம் இல்லாத நிலையில் முதன்முதலாக எங்கள் கட்சிக்காக அமைத்துள்ளோம். கட்சிக்கு என தனியாக தொலைக்காட்சி சேனல் துவங்கும் திட்டம் உள்ளது. அதன் முன்னோட்டம் தான் இந்த ஊடக மையம்.
அடுத்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாக எங்கள் கட்சிக்கு என தனியாக தொலைக்காட்சி சேனல் துவங்கப்படும் என்றார்.