முதல்வரை இழிவுபடுத்துவதா? சென்னையில் நாளை இலங்கை தூதரகத்தை இழுத்து மூடும் போராட்டம்- வேல்முருகன்
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையில் கட்டுரை வெளியிட்ட இலங்கையைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நாளை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் தி. வேல்முருகன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் தமிழக முதல்வர், ஒரு நாட்டின் முக்கிய தலைவர் என்றும் பாராமல் பெண் என்றும் பாராமல் கொச்சைப்படுத்தி விமர்சித்து கட்டுரை வெளியிட்டுள்ளனர்.
தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தமிழக முதல்வர். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளில் வென்று 37 தொகுதிகளைக் கைப்பற்றி அகில இந்திய அளவில் 3வது பெரிய கட்சியின் தலைவராக திகழ்கிறவர் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா.
தமிழ்நாட்டு மீனவர்களை சிங்களப் பேரினவாத அரசு படுகொலை செய்யும் போதும் கைது செய்து சிறைகளில் அடைக்கிற போதும் ஒரு மாநிலத்தின் முதல்வர் என்கிற முறையில் இந்திய மத்திய அரசின் பிரதமருக்கு கடிதம் எழுதுவது என்பது ஒரு ஜனநாயக கடமை.
அத்தகைய ஜனநாயகக் கடமையாற்றி வரும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் தமது அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகம் கட்டுரை வெளியிட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஒட்டுமொத்த தமிழகத்தையும் கொந்தளிக்க வைத்துள்ளது.
அத்துடன் இந்திய நாட்டின் பிரதமர் அவர்களையும் இழிவுபடுத்துகிறது இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியாகி உள்ள கட்டுரை. இது ஒட்டுமொத்த இந்தியாவையே இழிவுபடுத்துவதாகும்.
இலங்கையில் ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள பேரினவாத அரசுக்கு எதிராக தமிழ்நாட்டு சட்டசபையில் எண்ணற்ற தீர்மானங்களை நிறைவேற்றி போர்க்குற்றவாளி ராஜபக்சே கும்பலுக்கு சிம்ம சொப்பணமாக தமிழ்நாட்டு முதலமைச்சர் அம்மா அவர்கள் இருக்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக இழிசொற்களால் அவரை அவமதிப்பதை தமிழகம் சகித்துக் கொண்டிருக்காது.
இத்தகைய அவதூறுகளை ஆபாச கட்டுரைகளை வெளியிட்டுள்ள சிங்களப் பேரினவாதி ராஜபக்சே கும்பலுக்கு தக்க பாடம் புகட்டும் வகையில் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை இழுத்து மூடவும் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரை கைது செய்து சிறையில் அடைக்கவும் உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
இந்தியாவின் ஒரு மாநிலத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை இழிவுபடுத்தி பேசுகிற இலங்கைக்கு தக்க பாடம் புகட்டும் வகையில் இலங்கையுடனான அனைத்து உறவுகளையும் இந்திய பேரரசு துண்டிக்க வேண்டும். டெல்லியில் உள்ள இலங்கை தூதருக்கு ஆணை அனுப்பி அவரை நேரில் வரவழைத்து எச்சரிக்க வேண்டும். இத்தகைய இழிவான கட்டுரையை வெளியிட்ட இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்துக்கு பொறுப்பான, அந்நாட்டு பாதுகாப்புத் துறை செயலாளர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியும் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை இழுத்து மூடவும் நாளை காலை 10 மணிக்கு எனது தலைமையில் மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது.
இந்த முற்றுகைப் போராட்டத்தில் கட்சி, சாதி, மத எல்லைகளைக் கடந்து தமிழின உறவுகளாய் ஒன்று திரண்டு இலங்கை சிங்கள பேரினவாத ராஜபக்சே கும்பலுக்கு தகுந்த பாடம் புகட்டுவோம் என்று உரிமையோடு அழைக்கிறேன்.
இவ்வாறு வேல்முருகன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.