ராஜபக்சேவை சந்தித்த சுப்பிரமணியன் சுவாமி: வேல்முருகன் கடும் கண்டனம்!
சென்னை: இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி சந்தித்து பேசியதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பா.ஜனதா கட்சியின் சுப்பிரமணியசாமி தலைமையில் 5 பேர் கொண்ட குழு ஒன்று இலங்கை சென்று ராஜபக்சேவை சந்தித்து பேசியுள்ளது.
இந்த சந்திப்பின்போது இலங்கையுடன் நல்லுறவையே இந்திய பிரதமர் நரேந்திரமோடி விரும்புகிறார் என்றும், தமிழக குரல்கள் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம் என்றும் ராஜபக்சேவிடம் சுப்பிரமணியசாமி கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
சுப்பிரமணியசாமி தலைமையிலான குழு தன்னிச்சையாக சென்றதா? அல்லது பா.ஜனதா கட்சியே அனுப்பி வைத்ததா? அல்லது மத்திய மோடி அரசு அனுப்பி வைத்ததா? என்ற கேள்விகளுக்கு விடை எதுவும் இல்லை.
இந்திய அரசின் இலங்கை தொடர்பான நிலைப்பாடு குறித்து பேச சுப்பிரமணியசாமி யார்? அவருக்கு என்ன உரிமை இருக்கிறது? மத்திய அரசு இந்த விவகாரத்தில் இன்னமும் மவுனமாக இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் போர்க்குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ராஜபக்சேவை சுப்பிரமணியசாமி தலைமையிலான பா.ஜனதா குழு எப்படி சந்திக்க முடிந்தது? அப்படியானால் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை மத்திய மோடி அரசு புறக்கணிக்கிறதா? என்பதற்கான விடை தெரிய வேண்டும்.
இந்தியாவில் கடல் ஆராய்ச்சி மையங்களை நிறுவுவது தொடர்பாக சுப்பிரமணியசாமியிடம் ராஜபச்சே பேசுவதற்கு அவர் என்ன இந்திய அரசின் பிரதிநிதியா?
இலங்கை சென்ற சுப்பிரமணியசாமி குழு பற்றி மோடி அரசின் கூட்டணி கட்சிகளான ம.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. மற்றும் இந்த கூட்டணிக்கு தலைமை வகிக்கும் தமிழக பா.ஜனதா கட்சி ஆகியவை கள்ள மவுனம் சாதிப்பது ஏன்? இது பச்சை தமிழின துரோகம் அல்லவா?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.