சங்கரராமன் தானே வெட்டிக் கொண்டு சாகலை..: தீர்ப்பு குறித்து மகன் ஆன்ந்த் சர்மா அதிர்ச்சி
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளராக இருந்த சங்கரராமன் 2004ஆம் ஆண்டு கோவில் வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் உட்பட 23 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட சங்கராச்சாரியார் உட்பட 23 பேரும் வழக்கில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த தீர்ப்பு கடும் அதிர்ச்சி அளிக்கிறது என்று சங்கரராமன் மகன் ஆன்ந்த் சர்மா கூறியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது.. எங்களால் நம்பமுடியவில்லை. என்னுடைய தந்தையார் தானே வெட்டிக் கொண்டு சாகவில்லை. எங்கள் தந்தையை யார் வெட்டி கொலை செய்தனர் என்பதை அறிய விரும்புகிறோம்.
இந்த கொலையில் நேரடி தொடர்புடையவர்களையாவது நீதிமன்றம் தண்டித்திருக்கலாம். நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக ஆராய்ந்த பிறகு மேல்முறையீடு செய்வது குறித்து முடிவு செய்வோம் என்றார்.