''புறம்போக்கு''... இது விஜயகாந்த் விளாசல்!
திருவள்ளூர்: திருவள்ளூர் தொகுதியில் நேற்று பிரசாரம் செய்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், அமைச்சர்கள் புறம்போக்கு நிலங்களைக் கொள்ளையடி்ப்பதாக குற்றம் சாட்டிப் பேசினார்.
திருவள்ளூர் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் யுவராஜுக்கு ஆதரவு திரட்டி ஆவடியில் பேசினார் விஜயகாந்த்.
அப்போது அவர் திருவள்ளூர் மாவட்டத்தில் புறம்போக்கு நிலங்களை 3 அமைச்சர்கள் கொள்ளையடித்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், இது தொடர்பாக அவர் கூறியதாவது :-
நிலம் கொள்ளை...
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 3 அதிமுக அமைச்சர்கள் புறம்போக்கு நிலங்களை விற்பனை செய்து கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கிறார்கள். மக்கள் பிரச்னைகளை கவனிப்பதில்லை.
விரட்டும் மக்கள்...
அதிமுக வேட்பாளராக உள்ள எம்.பி வேணுகோபால் கடந்த 5 வருடமாக தொகுதி பக்கமே தலைகாட்டவில்லை. மக்கள் அவரை புறக்கணிக்கிறார்கள். சில இடங்களில் ஓட்டு கேட்கும்போது அவரை விரட்டி அடிக்கின்றனர்.
வாக்காளர்களுக்கு பணம்...
பறக்கும் படை அதிகாரிகள் ஆளுங்கட்சியினர் வாகனங்களை சோதனை செய்வது கிடையாது. வாக்காளருக்கு பணம் கொடுக்கும் அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. எதிர்க்கட்சி வாகனங்களை மட்டும் அதிகாரிகள் சோதனை செய்து தொல்லை கொடுக்கின்றனர்.
அம்மா வாட்டர்...
ஆவடியில் மட்டுமின்றி தமிழகத்திலும் குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. ஆனால் அதை தீர்க்க அதிமுக அரசுக்கு அக்கறையில்லை. அரசு அம்மா வாட்டர் என ஒரு பாட்டிலை 10 ரூபாய்க்கு விற்கிறது.
முறையான டாக்டர்கள் இல்லை....
ஆவடி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை. இதனால் நோயாளிகள் சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையை நாடி செல்ல வேண்டியுள்ளது என்று அவர் குற்றம் சாட்டிப் பேசினார்.