விஜய்காந்துக்கு விருந்து கொடுத்தால் தைலாபுரத்தில் கால்வைக்க மாட்டேன்- எச்சரித்த ராமதாஸ்
சென்னை: தைலாபுரம் தோட்டத்தில் தேமுதிக தலைவர் விஜய்காந்துக்கு விருந்து கொடுத்துவிட்டு தர்மபுரியில் பிரசாரத்திற்கு அழைத்துச் சென்று அசத்திவிடலாம் என்று மனக்கணக்கு போட்டிருந்த பாமக வேட்பாளர் அன்புமணியின் கனவு கலைந்து விட்டது.
விருந்து கேன்சலான கையோடு விஜயகாந்தும் தொண்டை பிரச்சனையைக் காரணம் காட்டி தர்மபுரி பிரசாரத்தை கேன்சல் செய்யவே, பாமக, தேமுதிக உறவு எண்ணெய்யும், தண்ணீரையும் போல இன்னும் கலக்காமலேயே இருக்கிறது.
ராமதாஸ் நிலை
தேமுதிக உடன் கூட்டணி என்பதையே பாமக நிறுவனர் ராமதாஸ் ஒப்புக்கொள்ளவில்லை. நடிகருக்கு ஓட்டுக் கேட்க மாட்டேன் என்ற அறிவித்த கையோடு ஓய்வெடுக்கப் போனாவர் பின்னர் சமாதானமாகி பிரசாரம் செய்தார்.
விஜயகாந்துக்கு விருந்து
தேமுதிக வேட்பாளர்களுக்கு பல இடங்களில் பாமகவினர் இன்னமும் ஓட்டு கேட்டு செல்லவில்லை. ராமதாஸை சமாதானம் செய்யவும், விஜயகாந்த்துடன் அவரை சந்திக்க வைக்கவும் முயற்சி செய்த அன்புமணி, தைலாபுரத்தில் விருந்துக்கு ஏற்பாடு செய்தார்.
விருந்துக்கு ரெடியான விஜயகாந்த்
இதற்கு ஒத்துக்கொண்ட விஜயகாந்த், புதுச்சேரியில் பாமகவிற்கு ஆதரவு என்று கிரீன் சிக்னலை முதலில் கொடுத்தார். இவர் இறங்கி வந்து ஆதரவு கொடுக்க முக்கியக் காரணம், சேலத்தில் ராமதாஸ் பிரசாரம் செய்தால், தனது மச்சான் சுதீஷ் வெற்றி உறுதியாகிவிடும் என்று கணக்குப் போட்டுத்தானாம்.
ராமதாஸ் கமெண்ட்
அதே சமயம், தன் மகனிடம் பேசிய ராமதாஸ், உனக்கு தொகுதி தர்மபுரிதானே, தைலாபுரத்தில் ஏன் விருந்து கொடுக்க வேண்டும் என்று கேட்டாராம். அதை மீறி தைலாபுரத்தில் விஜயகாந்த் கால் வைத்தால் என்னுடைய கால் எப்போது அங்கு படாது என்று கூறிவிட்டாராம் ராமதாஸ்.
கேன்சலான பிரசாரம்
இந்த விஷயம் விஜயகாந்துக்கு தெரியவரவே, தொண்டை வலியை காரணம் காட்டி தனது பிரசாரத்தை ரத்து செய்து விட்டு ஓய்வெடுக்கப் போய்விட்டாராம் விஜயகாந்த் என்கின்றன தகவல்கள்.
வருவாரா? மாட்டாரா?
இந்த சிக்கலில் சேலத்திற்கு ராமதாஸ் வருவாரா என்று சுதீசும், தர்மபுரிக்கு கேப்டன் வருவாரா என்று அன்புமணியும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.