உங்களையெல்லாம் ஏன் கூப்பிட்டேன் தெரியுமா.. கட்சியினரை டென்ஷன் ஆக்கிய விஜயகாந்த்!
சென்னை: உடல் நலம் சரியில்லாமல் இருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், சுதந்திர தினத்தன்று தனது கட்சியின் தலைமைக் கழக அலுவலகத்தில் நடந்த கொடியேற்றும் விழாவுக்கு வந்தபோது மிகவும் சோர்வாகவும், உடல் தளர்ந்தும் காணப்பட்டாராம். மேலும் அவரைக் கைத்தாங்கலாகத்தான் கூட்டி வந்தனராம். அதேபோல கட்சியினர் அவருடன் பேச ஆர்வமாக இருந்தும் கூட சில நிமிடங்கள் மட்டுமே அவர்களிடம் விஜயகாந்த் பேசியதால் கட்சியினர் அதிருப்தி அடைந்து போனார்களாம்.
விஜயகாந்த்தின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தைத் தாண்டி வெளியில் யாரிடமும் சொல்லாமல் அமைதி காத்து வருகிறார்களாம். அவர் எப்போது தேறி வருவார் என்பது குறித்து கட்சியினருக்கு சரியாக தெரியவில்லை.
முக்கிய நிர்வாகிகளுக்குக் கூட அவரைப் பார்க்க அனுமதி இல்லையாம். சுதீஷாகப் பார்த்து யாரையாவது அனுமதித்தால்தான் உண்டு என்கிறார்கள்.
டேக் டைவர்ஷன் டூ கோயம்பத்தூர்
கூடங்குளம் போராட்டக் குழுவினர் விஜயகாந்த்தைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளனர். அவர்கள் பிரச்சினை தொடர்பாக பேச நேரம் கேட்டுள்ளனர். ஆனால் விஜயகாந்த் கோவைக்குப் போய் ஓய்வெடுத்து வருகிறார் என்று அவர்களிடம் கூறி விட்டனராம்.
சுதந்திர தின சந்திப்பு
இந்த நிலையில்தான் சுதந்திர தினத்தன்று கட்சியினரை கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் சந்திப்பார்கள் என்று தகவல் வந்தது. கட்சியினர் குஷியாகி விட்டனர். கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்கு பார்த்தசாரதியும், சுதீஷும்தான் கைத்தாங்கலாக விஜயகாந்த்தை அழைத்து வந்தனர்.
ஏன் வரச் சொன்னேன் தெரியுமா
உடம்பு இளைத்துப் போய் பார்க்கவே மிகவும் சோர்வாக காணப்பட்டாராம் விஜயகாந்த். உடம்பில் பழைய தெம்பு இல்லை. பின்னர் கட்சியினருடன் பேசுவதற்காக உள்ளே வந்தார் விஜயகாந்த். யாரையும் அவர் பேசவிடவில்லை. அவரே மைக்கில் பேசினார். உங்களை ஏன் வரச் சொன்னே தெரியுமா என்று ஆரம்பித்து சுருக்கமாக பேசினாராம் விஜயகாந்த்.
இதுக்குத்தான் வரச் சொன்னேன்...
நான் நல்லா இருக்கேன். எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. உங்களை எதுக்கு நான் இன்னைக்கு வரச் சொன்னேன் தெரியுமா? இங்கே இருக்கும் நீங்க எல்லோரும் இனி ஒவ்வொரு மாசமும் ஒவ்வொரு தொகுதியிலும் ஆயிரம் பேரை உறுப்பினர்களாக சேர்க்கணும். அப்போதான் 2016-ல் நாம ஆட்சியைப் பிடிக்க முடியும். இதை சொல்றதுக்குதான் நான் உங்களை வரச் சொன்னேன். எல்லோரும் கிளம்புங்க என்று கூறி முடித்து விட்டு பார்த்தசாரதி மறுபடியும் கைத்தாங்கலாக பிடித்துக் கொள்ள மெதுவாக நடந்து காரில் ஏறிப் போய் விட்டாராம் விஜயகாந்த்.
இதுக்கா...
இதனால் கட்சியினர் செம கடுப்பாகி விட்டார்களாம். இதற்கு வரச் சொல்லாமலேயே இருந்திருக்கலாம். இதைச் சொல்லவா கூப்பிட்டார் என்று பலரும் டென்ஷனாகி விட்டார்களாம். ஆனால் அந்த டென்ஷனைப் பார்க்க சுதீஷ்தான் அங்கு இல்லை. அவரும் கிளம்பிப் போய் விட்டார்.
இப்படியே போய்ட்டிருந்தா எப்படி
கட்சியில் ஒரு சுரத்தே இல்லை. இப்படியே போய்க் கொண்டிருந்தால் ரொம்பக் கஷ்டம் என்று கட்சியினர் சற்று தைரியமாகவே உரக்கப் பேசியபடி கோயம்பேட்டிலிருந்து கிளம்பிப் போனதைப் பார்க்க முடிந்தது - கேட்க முடிந்தது.