புத்தம் புது உற்சாகத்துடன் நல உதவிகள் வழங்கும் விழாவுக்கு வந்த விஜயகாந்த்
சென்னை: உடல் நலம் குன்றியுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், நேற்று சென்னையில் கட்சித் தலையமைகத்தில் நடந்த நல உதவிகள் வழங்கும் விழாவுக்கு புது உற்சாகத்துடன், வந்திருந்தது கட்சியினரை மகிழ்வித்தது.
விஜயகாந்த்துக்கு நாளை 63 வயது பிறக்கிறது. இதையொட்டி அவரது பிறந்த நாளை வறுமை ஒழிப்புதினமாக கட்சியினர் கொண்டாடவுள்ளனர்.
இதையொட்டி நேற்று சென்னையில் கட்சி தலைமை அலுவலகத்தில் ரூ. 1 கோடி மதிப்பிலான நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விஜயகாந்த் கலந்து கொண்டார்.
புது உற்சாகத்துடன் - தெம்புடன்
சுதந்திர தினத்தின்போது தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்கு விஜயகாந்த் வந்திருந்தபோது அவரை பிடித்துக் கொண்டு நடக்கும் நிலையில் உடல் நலம் சோர்வுற்று இருந்தார். ஆனால் நேற்று அப்படி இல்லை. சற்று தெம்புடன் காணப்பட்டார் விஜயகாந்த்.
மனைவியுடன்
விஜயகாந்த்துடன் அவரது மனைவி பிரேமலதா, எம்.எல்.ஏக்கள் என பலரும் வந்திருந்தனர்.
தனது கைகளால் வழங்கினார்
தமிழகம் முழுவதும் வறுமை நிலையில் உள்ள 1000 குடும்பங்களை தேர்வு செய்து ஒவ்வொரு குடும்பத்துக்கும் தே.மு.தி.க. சார்பில் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.1 கோடி வழங்கப்பட்டது. இந்த உதவிகளைப் பெற வந்திருந்தவர்களுக்கு விஜயகாந்த்தே தனது கைப்பட உதவிப் பொருட்களை வழங்கினார்.
ஜாலியாகப் பேசினார்
உதவிப் பொருட்களை பெற்றோர் விஜயகாந்த்துக்கு நன்றி கூறினர். அவர்களிடம் ஜாலியாக, உற்சாகமாகப் பேசினார் விஜயகாந்த்.
10 குடும்பத்துக்கு
சென்னை மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 10 குடும்பத்துக்கு நலத்திட்ட உதவியாக தலா ரூ.10 ஆயிரத்தை விஜயகாந்த் நேரில் வழங்கினார்.
கட்சியினர் நம்பிக்கை
சுதந்திர தின விழாவின்போது விஜயகாந்த் வந்த விதத்தைப் பார்த்து கட்சியினர் ரொம்பவேக் கவலைப்பட்டனர். ஆனால் நேற்று விஜயகாந்த் நல்ல தெம்புடன் இருந்தது அவர்களை மகிழ்வித்தது.
அருகில் நெருங்க அனுமதியில்லை
அதேசமயம், கட்சியினர் விஜயகாந்த்தை அணுகிப் பேசவோ, அவருக்கு மாலை போடவோ, சால்வை போடவோ அனுமதி இல்லை. எம்.எல்.ஏக்கள் சிலர் பாடிகார்டு போல விஜயகாந்த்தை யாரும் நெருங்கி விடாமல் அருகிலேயே நின்றிருந்தனர்.