பிரேமலதாவை பிரசாரத்திற்கு அனுப்ப முடியாது... விஜயகாந்த் திடீர் மறுப்பு
சென்னை: உள்ளாட்சி இடைத் தேர்தலில் தேமுதிக சார்பில் வி.சி.சந்திரக்குமார் மற்றும் இளங்கோவன் ஆகிய இருவரை மட்டுமே அனுப்பத் தயாராக இருப்பதாகவும், பிரேமலதாவையெல்லாம் அனுப்ப முடியாது என்றும் விஜயகாந்த் திட்டவட்டமாக கூறி விட்டாராம்.
பிரசாரத்திற்கு பிரேமலதாவை அனுப்பினால் நன்றாக இருக்கும் என்று அவரிடம் பாஜகவினர் கோரிக்கை விடுத்திருந்தனராம். அதற்கு அவர் அதெல்லாம் வேண்டாம். சந்திரகுமார், இளங்கோவன் பிரசாரம் செய்தால் போதும் என்று கூறி விட்டாராம் விஜயகாந்த்.
நேற்று கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியின் 10வது ஆண்டு விழாவையொட்டி கொடியேற்று விழா நடந்தது. இதில் விஜயகாந்த் கலந்து கொண்டார்.
ஆலோசனை
இந்த கொடியேற்று விழாவில் கலந்து கொண்டு, கொடியேற்றி வைத்து அனைவரும் மிட்டாய் கொடுத்தார் விஜயகாந்த். அதன் பின்னர் கட்சி அலுவலத்தில் உள்ளாட்சி இடைத் தேர்தல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார்.
பிரசாரத்திற்கு யாரை அனுப்பலாம்
இந்தக் கூட்டத்தில், உள்ளாட்சி இடைத் தேர்தல் பிரசாரத்திற்கு யாரை அனுப்பலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பிரேமலதா பெஸ்ட்
அப்போது சிலர் பிரேமலதா விஜயகாந்த்தை பிரசாரத்தில் ஈடுபடுத்தினால் நன்றாக இருக்கும் என்று பாஜக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டிப் பேசியுள்ளனர்.
அதெல்லாம் கிடையாது
ஆனால் இது இடைத்தேர்தல்தானே. அதுவும் உள்ளாட்சி இடைத் தேர்தல். எனவே பிரேமலதா தேவையில்லை, சுதீஷ் கூட தேவையில்லை என்று கூறி விட்டாராம் விஜயகாந்த்.
இவங்க மட்டும்தான்
கொறடா வி.சி.சந்திரகுமார், மாநிலப் பொருளாளர் இளங்கோவன் இவர்கள்தான் பிரசாரம் செய்வார்கள். இதற்கு பாஜக சரி என்றால் பிரசாரம் செய்யட்டும். வேண்டாம் என்றால், நமது வேலையைப் பார்ப்போம் என்று கூறி விட்டாராம் விஜயகாந்த்.