சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி... சிங்கப்பூரிலிருந்து சென்னை திரும்பினார் விஜயகாந்த்
சென்னை: சிங்கப்பூர் சிகிச்சை முடிந்து இன்று சென்னை திரும்பியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
நாடாளுமன்ற தேர்தல் வேலைகள், தொண்டர்களுடன் சந்திப்பு என பம்பரமாய் சுற்றிய தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு, தொடர்ந்து தீவிர அரசியல் பணியில் ஈடுபட்டதால் உடல் நலப் பாதிப்பு உண்டானது.
இதையடுத்து சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அதன் பிறகு கடந்த 13-ந்தேதி சிங்கப்பூர் சென்ற விஜயகாந்த், அங்கு பிரபல மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், 14 நாட்கள் சிகிச்சைக்குப் பின் இன்று சென்னை திரும்பினார் விஜயகாந்த். சிங்கப்பூரில் இருந்து தனியார் விமானம் மூலம் காலை 9.20 மணிக்கு சென்னை வந்த விஜயகாந்துடன் அவரது மனைவி பிரேமலதாவும் வந்திருந்தார்.
நேற்றிரவு விஜயகாந்தின் சென்னை வருகையில் திடீர் மாற்றம் என அக்கட்சித் தொண்டர்கள் மத்தியில் தகவல் பரவியது. இதனால், விஜயகாந்த் இன்று சென்னை வருவது குறித்து தொண்டர்களுக்கு தெரியாததால், விமான நிலையத்திற்கு கட்சி தொண்டர்கள் யாரும் வரவேற்க வரவில்லை.
விஜயகாந்த் விமான நிலையத்தில் இருந்து சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார். போர்வையால் உடலை மூடியபடி அவர் மிகவும் சோர்வாக காணப்பட்டார். பின்னர் விஜயகாந்தும் அவரது மனைவியும் காரில் ஏறி வீட்டிற்கு சென்றனர்.