விஜயகாந்த் மகன் வளர்த்த 5 நாய்கள் அபாரம்.. ஆளுக்கு ஒரு பரிசுடன் திரும்பின!
சென்னை: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் வளர்த்த 5 நாய்கள், சென்னையில் நடந்த நாய்கள் கண்காட்சியில் கலந்து கொண்டன. இதில் 5 பரிசுகளையும் வென்று விஜய பிரபாகரனுக்கும், விஜயகாந்த்துக்கும் பெருமை சேர்த்தன.
இந்தப் போட்டியில் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமியின் சவ் சவ் நாய்க்கும் ஒரு பரிசு கிடைத்தது.
ஆளுநர் ரோசய்யா கலந்து கொண்டு வெற்றி பெற்ற நாய்களுக்குப் பரிசுகளை வழங்கிக் கெளரவித்தார்.
104வது நாய்கள் சாம்பியன்ஷிப்
சென்னை நாய்கள் கிளப்பின் சார்பில் 103 மற்றும் 104வது சாம்பியன்ஷிப் கண்காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 3 நாட்கள் நடைபெற்றது. நேற்றுடன் முடிவடைந்தது.
விதம் விதமான லொள் லொள்!
இந்தக் கண்காட்சியில் விதம் விதமான நாய்கள் கலந்து கொண்டன. குட்டியூண்டு நாய் முதல் பிரமாண்ட நாய்கள் வரை வகை வகையாக கண்களைக் கவரும் நாய்களைப் பார்க்க முடிந்தது.
மொத்தம் 52 டைப் நாய்கள்
மொத்தம் 52 வகையான நாய்கள் இந்தக் கண்காட்சியில் கலந்து கொண்டன. அனைத்தையும் பிரித்து 10 விதமான பிரிவுகளில் போடடிகள் நடத்தப்பட்டன.
சென்னையிலிருந்து 300
மொத்தம் 682 நாய்கள் கலந்து கொண்டன. இதில் சென்னை நாய்கள் மட்டும் 300 ஆகும். மேலும் சில வெளிநாட்டு நாய்களும் கூட வந்திருந்தன. இவற்றை விமானத்தில் கூட்டி வந்திருந்தனர்.
ஒவ்வொரு நாளும் பத்து பிரிவுகளில் போட்டி
ஒவ்வொரு நாளும் பத்து பிரிவுகளில் போட்டி நடந்து. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடித்த நாய்க்குப் பரிசு கொடுத்தனர். மேலும் 10 பிரிவுகளில் பெஸ்ட் நாய் ஒன்றையும் தனியாக தேர்ந்தெடுத்தும் பரிசு வழங்கினர்.
விஜயகாந்த் மகன் வளர்த்த 5 நாய்கள்
இந்தப் போட்டியில் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் தனது 5 நாய்களையும் களத்தில் இறக்கியி்ருந்தார். இதில் இறுதிப் போட்டியில் அவரது நான்கு நாய்கள் இடம் பெற்று பரிசைத் தட்டிச் சென்றன. மேலும் 10 நாய்களில் சிறந்த நாய் என்ற பரிசை மிஸ்டர் பிக் என்ற விஜய பிரபாகரன் நாய் கூடுதலாக தட்டி பரிசு எண்ணிக்கையை 5 ஆக கூட்டியது.
சைதை துரைசாமியின் சவ் சவ்
அதேபோல மேயர் சைதை துரைசாமியின் சவ் சவ் நாய்க்கும் பரிசு கிடைத்தது. இது சிங்கத்தின் முகம் போல உள்ள நாயாகும்.