கியாஜி, போலோஜி... குஜராத் மக்களைக் கவர இந்தியில் பேசிய விஜயகாந்த்!
சென்னை : சென்னையில் வாழும் குஜராத் மக்களைக் கவருவதற்காக தனது பேச்சினூடே சிலப்பல இந்தி வார்த்தைகளைப் பிரயோகித்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் ஜே.கா.ரவீந்திரனை ஆதரித்து நேற்று யானைகவுனியில் பிரச்சாரம் செய்தார் விஜயகாந்த். சாலையில் பிரச்சார வாகனத்தில் நின்றபடி பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். தொண்டர்கள் அவருடைய பேச்சை ஆர்வமுடன் கேட்டுக் கொண்டிருந்தனர். இதனால் அந்தப் பகுதியில் எந்த வாகனங்களும் செல்லவில்லை.
அப்போது ஆம்புலன்ஸ் ஒன்று வருவதற்காக சைரன் ஒலி கேட்டது. இதைக் கவனித்த விஜயகாந்த் உடனடியாக தனது பேச்சை நிறுத்தினார். மேலும், ‘ஆம்புலன்ஸ் செல்வதற்கு கட்சித் தொண்டர்கள் வழி ஏற்படுத்தித் தருமாறு கோரிக்கையும் விடுத்தார்.
அதனைத் தொடர்ந்து தொண்டர்கள் வழி விட ஆம்புலன்ஸ் அப்பகுதியைக் கடந்து சென்றது.
அதனைத் தொடர்ந்து மீண்டும் தனது பிரச்சாரத்தைத் தொடர்ந்தார் விஜயகாந்த். மத்திய சென்னை பகுத்யில் உள்ள சவுகார்பேட்டையில் குஜராத் மக்கள் அதிகம் வசிப்பதால், விஜயகாந்த் தனது பிரச்சாரத்தின் இடையே ஓரிரு வார்த்தைகள் இந்தியில் பேசினார்.
விஜயகாந்தின் இந்தி வார்த்தைகளை ரசித்த கட்சித் தொண்டர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.