எத்தனை சோதனைகள்.. ஆனாலும் தொடர்ந்து பணியாற்றுவோம்.. பிறந்த நாளையொட்டி விஜயகாந்த் செய்தி!
சென்னை: பல்வேறு இன்னல்களையும் வழக்குகளையும் சந்தித்து வருகின்ற நாம் நமக்கு ஏற்படுகின்ற சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றி தமிழக மக்களுக்கு தொடர்ந்து தொண்டாற்றுவோம் என்று எனது பிறந்த நாளில் சூளுரை ஏற்போம் என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
தனது பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு அவர் அறிக்கை விட்டுள்ளார். அதை தனது பிறந்த நாளை வறுமை ஒழிப்புத தினமாக கட்சி கொண்டாடும் என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே
திரையுலகில் இருந்த காலம் முதல் இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே என்ற கொள்கை முழக்கத்துடன் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் என்னுடைய பிறந்தநாளன்று ஏழை, எளியோர்க்கு நல உதவிகள் செய்து வருகிறேன்.
வறுமை ஒழிப்பு தினம்
கழக நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று எனது பிறந்த நாளை "வறுமை ஒழிப்பு தினமாக" தமிழகம் முழுவதும் கொண்டாடிவருகிறோம். அதன் மூலம் ஏழை மக்களின் வறுமை ஒழிக்கப்பட வேண்டும் என்று தேமுதிக அயராது பாடுபட்டு வருகிறது. மேலும் வறுமை ஒழிப்பு என்பது மக்கள் இயக்கமாக மாற்றப்பட வேண்டும் என்பதுதான் நமது குறிக்கோளாகும்.
பல காலமாக எத்தனை உதவிகள்
பல்லாண்டு காலமாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடைகளும், நோட்டுப்புத்தகங்களும், கல்வி கட்டணங்களுக்கு நிதி உதவிகளும், சலவைதொழிலாளர்களுக்கு சலவைப்பெட்டிகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு டி.வி.எஸ். ஸ்கூட்டி வண்டிகளும், மூன்று சக்கர சைக்கிள்களும், காதுகேட்கும் கருவிகளும்,ஏழைகள் பயன்பெற இலவச திருமண மண்டபம், ஏழை சகோதரிகளுக்கு இலவச திருமணங்களும், நிதிஉதவிகளும், தையல் இயந்திரங்களும், மாணவ, மாணவிகள் பயன்பெற இலவச கணினி மையங்களும், பெண் சிசு கொலையை தடுத்திட "பெண்கள் நாட்டின் கண்கள்" என்ற திட்டத்தின் மூலம் பெண்குழந்தைகளுக்கு வைப்புத் தொகைகளும், முதியோர் இல்லங்களுக்கு நிதி உதவிகளும், ஏழை குடும்பத்திற்கு வீட்டுமனை நிலங்களும், "மக்களுக்காக மக்கள் பணி" என்ற மகத்தான திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் உதவிடும் வகையில் பல்வேறு நல உதவிகளை பலகோடி ரூபாய் மதிப்பில் தொடர்ந்து செய்து வருகிறேன்.
இந்த வருஷம் குடும்ப நல நிதியுதவி
அதே போல இந்த ஆண்டு நலிவுற்ற ஏழை குடும்பங்களுக்கு "குடும்ப நல நிதி உதவி" வழங்க உள்ளேன். தமிழகம் முழுவதும் சுமார் ஆயிரம் நலிவுற்ற குடும்பங்களை தேர்வு செய்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூபாய் பத்தாயிரம் வீதம் சுமார் ஒருகோடி ரூபாய் வழங்க உள்ளேன். நான் வழங்கும் இந்த "குடும்ப நல நிதி உதவி" அந்த குடும்பங்களின் வாழ்க்கைச் சுமையை ஓரளவிற்கேனும் குறைத்து, நிம்மதியான வாழ்விற்கு வழிவகுக்கும் என நம்புகிறேன். மேலும் புரட்சி தலைவர் எம்ஜிஆர் காதுகேளாதோர் பள்ளிக்கு உதவிடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் வழங்குவதைப் போல ரூபாய் ஐம்பதாயிரம் இந்த ஆண்டும் வழங்குகிறேன்.
செய்வீங்க.. எனக்கு நன்கு தெரியும்
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூராட்சி, ஊராட்சி, வட்டம், வார்டு, கிளை கழகம் என அனைத்து இடங்களிலும் கழகத்தின் கொடியேற்றுதல், இனிப்பு வழங்குதல், அன்னதானம் வழங்குதல், திருக்கோவில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் ஆகியவற்றில் சிறப்பு வழிபாடுகள் செய்தல் போன்ற பல நிகழ்சிகளை செய்வீர்கள் என்பது எனக்கு நன்கு தெரியும்.
இருந்தாலும்...
இருந்தாலும் நான் நல உதவிகளை செய்வதைப்போலவே தேமுதிக வின் அமைப்பு ரீதியான 59 மாவட்டங்களிலும், பாண்டிச்சேரி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, டெல்லி, அந்தமான் போன்ற மாநிலங்களிலும், துபாய், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பல்வேறு வகையான நல உதவிகளை கழகத்தின் நிர்வாகிகளும், தொண்டர்களும் ஏழை, எளிய மக்களுக்கு இந்த வறுமை ஒழிப்பு தினத்தில் செய்யவேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
சிக்கித் தவிக்கும் மக்களுக்கு தொண்டாற்றுங்கள்
தமிழ்நாட்டில் விவசாயம் பாதிப்பு, தொழில் முடக்கம், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகளால் சட்டம் ஒழுங்கு சீர்கேடு என்பது போன்ற பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி தவிக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு உரிய தொண்டாற்றிடும் வகையில் தே.மு.தி.க.வின் பணிகள் அமையவேண்டும்.
கோர்ட் படிக்கட்டில் ஏற வேண்டியிருக்கே
இன்றைய சூழலில் தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு கூட உயர்நீதிமன்றத்தின் படிக்கட்டில் ஏறித்தான் அனுமதி பெறவேண்டி உள்ளது. நெருக்கடியான சூழ்நிலை நிலவும் இந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை அமைத்து தரவேண்டிய மாபெரும் கடமை தே.மு.தி.க.விற்கு உள்ளது.
அசைக்க முடியாத சக்தி
வறுமையை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசியல் பணிகளை செய்து வருகிறோம். மாற்றத்தை விரும்பும் மக்களின் அசைக்க முடியாத சக்தியாக தேமுதிக உருவெடுத்துள்ளது. அதற்காக தமிழ்நாட்டு மக்களுக்கு நான் கடமைப் பட்டுள்ளேன். தமிழக மக்கள் தங்களின் மேலான ஆதரவையும் ஒத்துழைப்பையும் தே.மு.தி.க.விற்கு தரவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
தொடர்ந்து தொண்டாற்றுவோம்
பல்வேறு இன்னல்களையும் வழக்குகளையும் சந்தித்து வருகின்ற நாம் நமக்கு ஏற்படுகின்ற சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றி தமிழக மக்களுக்கு தொடர்ந்து தொண்டாற்றுவோம் என்று இந்த நாளில் சூளுரை ஏற்போம் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.