எல்லாம் "சும்மா".. இதுதான் சாதனையா "அம்மா"?.. ஜெ.வுக்கு விஜயகாந்த் கேள்வி!
சென்னை: நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்டு விட்டது. இதைத்தான் அதிமுக அரசின் சாதனை என்று கூறுகிறாரா முதல்வர் ஜெயலலிதா என்று கேட்டுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட 110 அறிக்கையில் கூறப்பட்டவை எல்லாம் வெற்று வேட்டு அறிவிப்புகள் என்றும் அவர் சாடியுள்ளார்.
விஜயகாந்த் அறிக்கை:
மக்களுக்கு ஏமாற்றம்
மாற்றம் தந்த தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தையே தந்துள்ளார் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா. மத்திய அரசின் புள்ளியியல் துறை 2012-13 ஆம் ஆண்டு இந்தியாவிலுள்ள மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
கடைசி இடத்தில்.. வேதனை, அதிர்ச்சி!
இந்த அறிக்கையின்படி தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது என்பது தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பின்தங்கிய மாநிலங்களாக கருதப்படும் மாநிலங்களெல்லாம். பொருளாதார வளர்ச்சியில் முன்னேறி வருகின்றன.
இதுதான் சாதனையா
ஆனால் பொருளாதார வளர்ச்சியில் முன்னேறிய தமிழ்நாட்டை கடைசி இடத்திற்கு கொண்டு சென்றதுதான் ஜெயலலிதாவின் தலைமையிலான தமிழக அரசின் சாதனையா?
எல்லாம் சும்மா
முதலமைச்சர் ஜெயலலிதா 110விதியின் கீழ் அறிவித்த அறிவிப்புகளெல்லாம் வெற்று அறிவிப்புகள் என நிரூபணமாகிறது.
சிந்திக்காமல் செயல்பட்டால் இப்படித்தான்!
ஏழை எளிய மக்களின் வறுமையை பயன்படுத்திக்கொண்டு, கவர்ச்சி திட்டங்களை அறிவித்து, அதை முழுமையாக செயல்படுத்தாமலும், மக்களுக்காக வளர்ச்சி திட்டங்களைப்பற்றி சிந்திக்காமலும் செயல்பட்டதன் விளைவுதான், தமிழகம் பொருளாதார வளர்ச்சியில் கடைசிநிலையை நோக்கிச் சென்றுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் புதிய தொழில் துவங்க நம்மாநிலத்தில் உள்ளவர்களே முன்வருவார்களா என்பது சந்தேகமே!
எப்படி வருவார்கள்
மேலும் வெளிமாநிலத்திலிருந்தோ, வெளிநாட்டிலிருந்தோ, இந்தநிலையை பார்த்த பிறகு தொழிலதிபர்கள், தமிழ்நாட்டில் தொழில் துவங்க எப்படி முன்வருவார்கள்.
மறைக்க முடியாது
"முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது" என்பதுபோல தமிழகத்தின் உண்மை நிலையை மத்திய அரசின் புள்ளியியல் துறை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளதை, இனியும் தமிழக மக்களிடம் மறைக்க முடியாது.
இனியாவது
எனவே இனியாவது தொழில்துறை வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கை எடுத்து, பொருளாதார வளர்ச்சியில் கடைகோடியில் இருக்கும் தமிழகத்தை வளர்ச்சிபெறும் மாநிலமாக மாற்ற முன் வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.