மீண்டும் சிகிச்சைக்காக விஜயகாந்த் சிங்கப்பூர் பயணம்!
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் சிகிச்சைக்காக நேற்று இரவு சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார்.
லோக்சபா தேர்தல் முடிவுக்குப்பிறகு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கட்சித் தொண்டர்களை சந்தித்து கருத்து கேட்டார். உங்களுடன் நான்' என்ற நிகழ்ச்சியில் அனைத்து மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
இதனால் விஜயகாந்தின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 9-ந் தேதி அவர் அனுமதிக்கப்பட்டார்.
நெஞ்சு எரிச்சல்
நெஞ்சு எரிச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. மருத்துவமனையில் பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதன்பிறகு அவர் வீடு திரும்பினார்.
மீண்டும் சிங்கப்பூர்
இந் நிலையில் விஜயகாந்த் நேற்று இரவு 11.40 மணிக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார். அவருடன் மனைவி பிரேமலதா மட்டும் சென்றார்.
ரகசிய பயணம்?
விஜயகாந்தின் சிங்கப்பூர் பயணம் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. விமான நிலையத்திற்கு தொண்டர்கள் யாரும் வரவில்லை. அவர் மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றதாக கூறப்படுகிறது.
கண் பிரச்சனை
ஏற்கனவே டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்ச்சியில் தடுமாறி கீழே விழப் போன போதே தமக்கு கண் பிரச்சனை இருப்பதாக கூறியிருந்தார். அதேபோல் மோடி பிரதமராக பதவியேற்ற போதும் விஜயகாந்துக்கு கண்ணில் நீர் வழிந்து கொண்டே இருந்ததால் நிகழ்ச்சிக்கே போகவில்லை என்றும் கூறப்பட்டது.
சிங்கப்பூரில் சிகிச்சை
அதனால் சிங்கப்பூர் சென்று விஜயகாந்த் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆனால் அவருக்கு கல்லீரல் பிரச்சனை..அதனால் சிகிச்சை பெற்றார் என்று செய்திகள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.