”நோட்டாவுக்கு வெல்கம் சொல்வோம்.. மாவட்டத்துடன் இணைக்காவிட்டால்”- கிராம மக்கள் முடிவு
புதுக்கோட்டை: வரும் லோக்சபா தேர்தலில் ஒரு முழு கிராமமும் நோட்டாவிற்கு ஆதரவாக தவாக்களிக்க முடிவு செய்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டம், ஆர்.பாலகுறிச்சி என்ற கிராமம்தான் அது.
அக்கிராமத்தை புதுக்கோட்டை மாவட்டத்துடன் முழுமையாக இணைக்காவிட்டால் நோட்டாவிற்கு வாக்களிப்பது என கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்த ஊராட்சியில் 5 குக்கிராமங்கள் உள்ளன. 2,217 வாக்காளர்கள் உள்ளனர். ஒரு நடுநிலைப் பள்ளி, 3 தொடக்கப் பள்ளிகள் உள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி, சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ளது.
இக்கிராம மக்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை சிவகங்கை மாவட்டத்திலும், குடும்ப அட்டை புதுக்கோட்டை மாவட்டத்திலும் உள்ளது. காவல் துறை, மருத்துவத் துறை, மின்வாரிய அலுவலகங்கள் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளன.
இதனால், இந்த ஊராட்சி மக்கள் பாஸ்போர்ட் மற்றும் சான்றிதழ்கள் பெற அலைக்கழிக்கப்படுகின்றனர். அரசின் நலத் திட்டங்களும் முழுமையாகக் கிடைக்க தாமதமாகிறது.
எனவே, மாவட்ட பிரச்னைக்கு நல்ல முடிவு இல்லையெனில் நோட்டாவில் வாக்களிப்போம் என இந்த கிராம மக்கள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
இதுகுறித்து ஆர்.பாலகுறிச்சி ஊராட்சித் தலைவர் ஆர். பெரிய பொன்னன் கூறியபோது,
"எங்களது ஊராட்சி இரு மாவட்டங்களுக்கிடையே சிக்கியுள்ளதால் எந்த நலத் திட்டங்களும் முழுமையாக வந்தடைவதில்லை. எனவே இரு மாவட்ட ஆட்சியர்கள் கலந்தாலோசித்து சிவகங்கை அல்லது புதுக்கோட்டை மாவட்டத்தில் இணைப்பது குறித்து நல்ல முடிவு காணவேண்டும்" என்றார்.