எம கண்டம் முடிந்து நல்ல நேரம் பார்த்து வாக்குச்சாவடிக்கு தாமதமாக வந்த வாக்காளர்கள்
கடலூர்: கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மேல்குமாரமங்கலம் கிராமத்தில் எம கண்டம் முடிந்த பிறகு மக்கள் வாக்களிக்க வந்தனர்.
கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட நெல்லிகுப்பம் அருகேயுள்ளது மேல்குமாரமங்கலம் கிராமம். அனைத்து வாக்குப்பதிவு மையங்களையும்போல இங்கும் காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுடன் தேர்தல் அலுவலர்கள் ஆஜராகிவிட்டனர். ஆனால் மக்களைத்தான் காணோம்.
என்னடா இது.. ஊர்மக்கள் ஒன்றாக சேர்ந்து வாக்குப்பதிவை புறக்கணித்துவிட்டார்களா? என்று சிறிது நேரம் தேர்தல் அதிகாரிகள் குழம்பிப்போனார்கள். காலை 7.30 மணிக்கு மேல் ஒவ்வொரு வாக்காளராக வாக்குச்சாவடிக்கு வரத்தொடங்கிய பிறகுதான் தேர்தல் அதிகாரிகள் நிம்மதியடைந்தனர்.
தமிழகம் முழுவதுமே வெயிலில் இருந்து தப்பிக்க காலை 7 மணிக்கெல்லாம் கியூவில் நின்று வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை செய்யும்போது, நீங்கள் மட்டும் ஏன் இவ்வளவு தாமதமாக வந்தீர்கள் என்று சிலரிடம் கேட்டதற்கு அவர்கள் சொன்ன பதில்தான் தூக்கி வாரிப்போட்டது.
இன்று வியாழக்கிழமை காலை 6 மணி முதல் 7.30 மணி வரை, எம கண்டம் என்பதால், அது முடிவடைந்த பிறகு வாக்களிக்க வந்ததாக அம்மக்கள் தெரிவித்தனர். நாட்டை ஆளப்போகிறவர்களை நல்ல நேரத்தில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற அவர்களின் அக்கறையை பாராட்டவா, அல்லது நேரம், காலத்தையெல்லாம் நம்புகிறார்களே என்று குறைபட்டுக்கொள்ளவா என்பதுதான் புரியவில்லை.