ஓட்டுபதிவிற்கான எந்திரங்களுக்கு சின்னங்கள் பொருத்தி “சீல்” – ஆலந்தூர் இடைத்தேர்தல் பணி மும்முரம்
ஆலந்தூர்: ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற இருக்கும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னம் பொருத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 24 ஆம் தேதி லோக்சபா தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் வி.என்.பி.வெங்கட்ராமன், தி.மு.க சார்பில் ஆர்.எஸ்.பாரதி, காங்கிரஸ் சார்பில் நாஞ்சில்பிரசாத், தே.மு.தி.க சார்பில் ஏ.எம்.காமராஜா, ஆம் ஆத்மி சார்பில் ஞாநி சங்கரன் மற்றும் காந்தியவாதி சசிபெருமாள் உள்பட 14 பேர் போட்டியிடுகின்றனர்.
ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆலந்தூர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி ராஜாராம் 316 வாக்குப்பதிவு மையங்களையும் பார்வையிட்டார். பொதுமக்கள் எந்தவித சிரமம் இன்றி ஓட்டு போடவும், வெயிலின் கொடுமையில் இருந்து பாதிக்காத வகையில் பந்தல்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
மேலும் தொகுதியில் 24 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளது. ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதிக்கான 632 வாக்குபதிவு எந்திரங்களுக்கும் ஆலந்தூர் ஏஜெஎஸ் நிதிப்பள்ளியில் வைத்து வேட்பாளர்கள் பட்டியல் பொருத்தும் பணி நேற்று முன்தினம் நடந்தது.
நேற்று ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கான 316 வாக்குப்பதிவு எந்திரங்களுக்கும் வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னம் பொருத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டன.
இந்த பணி ஆலந்தூர் தொகுதி பார்வையாளர் நரேன்குமார், ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி ராஜாராம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.