87 அடியை தாண்டிய மேட்டூர் அணையின் நீர்மட்டம்: இன்று இரவு 90 அடியை தாண்டும்
தர்மபுரி: நீர் வரத்து அதிகரித்துள்ளதையடுத்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் 87 அடியை தாண்டியுள்ளது.
கர்நாடகா மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அந்த அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் நீர் திறந்து விடப்படுகிறது. மேலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் ஞாயிற்றுக்கிழமை கபினி அணைக்கு வினாடிக்கு 33 ஆயிரம் கனஅடி நீரும், கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வினாடிக்கு 44 ஆயிரம் கனஅடி நீரும் வந்தது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை முதல் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி நீரும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி நீரும் காவிரியில் திறந்துவிடப்பட்டது.
முன்னதாக திறந்துவிடப்பட்ட நீரால் ஓகேனக்கலில் நீர்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது கூடுதல் நீர் வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆடிப்பெருக்கு நாளான நேற்று ஒகேனக்கலில் நீர் வரத்து அதிகம் இருந்ததால் யாரையும் குளிக்க அனுமதிக்கவில்லை.
நீர்வரத்து அதிகரிப்பதால் மேட்டூர் அணைக்கு ஞாயிற்றுக்கிழமை வினாடிக்கு 20 ஆயிரத்து 262 கனஅடி நீர் வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 84.19 அடியாக உயர்ந்தது. இன்று காலை அணைக்கு வினாடிக்கு 37 ஆயிரத்து 729 கனஅடி வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 87 அடியை தாண்டியுள்ளது. நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால் இன்று இரவுக்குள் அணையின் நீர்மட்டம் 90 அடியை தாண்டும்.
ஆடிப்பெருக்கு விழாவுக்காக அணையில் இருந்து நேற்று 6 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. அந்த அளவு தற்போது 800 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் இருந்து அதிக அளவு நீர் திறந்துவிடப்படுகிறது. அங்கிருந்து திறந்துவிடப்பட்ட 48 ஆயிரம் கனஅடி நீர் மேட்டூர் அணைக்கு வந்தால் அணை நிரம்பிவிடும்.