மேட்டூர் அணை நீர்மட்டம் 77.81 அடியாக உயர்வு: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு
மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 77.81 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 40,215 கனஅடியாக உள்ளது.
ஒகேனேக்கல் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரிக்கரையோரம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் அங்குள்ள கபினி, ஹாரங்கி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகள் நிரம்பி வழிகின்றன. இதனால், அந்த அணைகளில் இருந்து காவிரியில் திறந்துவிடப்பட்ட உபரி நீர் தமிழகத்திற்கு வந்துகொண்டுள்ளது.
கடந்த 10 நாள்களாக ஒகேனக்கல்லுக்கு வரும் கூடுதல் தண்ணீரால் அங்குள்ள உள்ள பாறைகள் அனைத்தும் மூழ்கிய நிலையில் தண்ணீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடுகிறது.
42 ஆயிரம் கனஅடி நீர்
நேற்று முன்தினம் சனிக்கிழமை ஒகேனேக்கல் அருவிக்கு வரும் நீர்வரத்து நொடிக்கு 39 ஆயிரம் கன அடியாக இருந்தது. இதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை மாலை நீர்வரத்து நொடிக்கு 42 ஆயிரம் கன அடியாக இருந்தது.
வெள்ள அபாய எச்சரிக்கை
இதனால், பாதுகாப்பு கருதி தொடர்ந்து 10-ஆவது நாளாக அருவியில் குளிக்கவும், பரிசல் ஒட்டவும் தடை விதிக்கப்பட்டது. மேலும், கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வேறு இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.
நிரம்பும் மேட்டூர் அணை
காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை மளமளவென நிரம்பி வருகிறது. அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 77.81 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 40,215 கனஅடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் கடந்த 3 நாட்களில் 10 அடி உயர்ந்துள்ளது.
ஆடிப்பெருக்கு விழா
தமிழகத்தில் ஆடிப்பெருக்கு விழா ஆகஸ்ட் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் டெல்டா மாவட்டங்களில் காவிரிக்கரையில் மக்கள் புனித நீராடி காவிரித் தாயை வணங்குவார்கள். அன்றைய தினத்தில் மக்கள் புனித நீராடுவதற்கு வசதியாக, ஆற்றில் கூடுதலாக தண்ணீர் திறக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் மேட்டூரில் இருந்து நேற்று காலை 8 மணி முதல் நீர் திறப்பு 6,800 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
விவசாயிகள் மகிழ்ச்சி
இதனிடையே கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கு வரும் நாட்களில் நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அணை வேகமாக தனது முழுகொள்ளலவான 120 அடியை விரைவில் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் இருந்து பாசனத்திற்கு விரைவில் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தொடங்கிய மின் உற்பத்தி
மேட்டூர் அணையில் இருந்து தற்போது திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 6,800 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால், அணை மின்நிலையம், சுரங்க மின்நிலையம் மற்றும் 5 கதவணை உள்ளிட்ட நீர்மின் நிலையங்களில் மின் உற்பத்தி தொடங்கி உள்ளது. மேலும், டெல்டா பகுதியில் பம்ப்செட் வசதி இல்லாத விவசாயிகளும், இந்த நீரை பயன்படுத்தி விவசாய பணிகளை மேற்கொள்ள முடியும்.