கடும் வறட்சி: அதிமுக வேட்பாளர்கள் விரட்டி அடிப்பால் காவிரியில் திடீர் தண்ணீர் திறப்பு
சேலம்: தமிழகத்தில் நிலவி வரும் கடும் குடிநீர் பஞ்சத்தை போக்கும் விதமாக காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தேர்தலையொட்டி தான் நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவுகின்றது. குடிப்பதற்கு கூட போதிய குடிநீர் இன்றி பொது மக்கள் அவதிப்படும் அவல நிலை உள்ளது. குறிப்பாக பெண்கள் சுமார் 2 முதல் 5 கிலோ மீட்டர் வரை நடந்து சென்று குடிநீர் கொண்டு வருகின்றனர். வெள்ளகோவில், திருப்பூர் போன்ற பகுதிகளில் ஒரு குடம் குடிநீர் ரூ. 5க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
மேலும், காவிரி நதி ஓடும் மாவட்டங்களில் கூட கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வாக்கு கேட்டு செல்லும் அதிமுக வேட்பாளர்களை பொது மக்கள் விரட்டுவதும், முற்றுகையிடுவதும், போராட்டம் நடத்துவதும், தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக அறிவிப்பு செய்வதுமாக உள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு மேட்டூர் அணையில் இருந்து குடிநீருக்காக, காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு ஆளும் கட்சி அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால், மேட்டூர் அணையிலும் தண்ணீர் மிக குறைவாக இருக்கின்ற போதிலும் தேர்தலையும், வறட்சியைும் கருத்தில் கொண்டு தண்ணீர் திறகப்பட்டுள்ளது.
திறக்கப்பட்ட நீர் சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, நாகை என காவிரி டெல்டா மாவட்டங்களில் பாய்ந்துள்ளது. இதன் காரணமாக இன்னும் ஒரு 15 தினங்களுக்கு குடிநீர் பிரச்சனையை ஓரளவு மாவட்ட நிர்வாகம் சமாளித்துவிடும் என கருதப்படுகின்றது.
மேலும், தேர்தல் நேரத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அதிமுக வேட்பாளர்கள் அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆனால், 24ம் தேதிக்குப் பின்னர் தண்ணீர் வருமா?