அரசியல் களத்தில் அ.தி.மு.க.வுக்கு எதிரிகளே இல்லை: ஜெயலலிதா
சென்னை: ஒற்றுமையாய் இருந்து பணியாற்றினால் நம்மை வீழ்த்த யாருமில்லை என்று கட்சியினரிடையே முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கூறியுள்ளார். அரசியல் களத்தில் அ.தி.மு.க.வுக்கு எதிரிகளே இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக ஏழாவது முறையாக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்போது, தலைமைக்கழக அலுவலகத்தில் கூடியிருந்த கட்சியினர் மத்தியில் அவர் பேசியதாவது:
எம்.ஜி.ஆரால் நிறுவப்பட்ட அதிமுக எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளராக மீண்டும் என்னை ஒருமனதாக தேர்ந்தெடுத்துள்ளீர்கள். என்மீது எல்லையில்லாத நம்பிக்கையும், அளவு கடந்த அன்பும் கொண்டு என்னை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.
பொதுச் செயலாளர் பொறுப்பை மகிழ்ச்சியுடனும், நெகிழ்ச்சியுடனும் ஏற்றுக் கொள்கிறேன். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து எனக்காக விருப்ப மனுக்களை தாக்கல் செய்த அனைவருக்கும் உள்ளங்கனிந்த நன்றிகள்.
அதிமுகவின் வளர்ச்சி
கால் நூற்றாண்டுக்கும் மேலாக, அதாவது 26 ஆண்டுகளாக கட்சியின் பொதுச் செயலாளராக செயலாற்றி வருகிறேன். இந்த 26 ஆண்டுகளில் கட்சி பிரம்மிக்கத்தக்க வளர்ச்சியை அடைந்திருக்கிறது. கடந்த 1987-ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர்., விட்டுச் சென்ற போது கட்சியின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 17 லட்சமாக இருந்தது. இப்போது, ஒரு கோடியே 50 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர்.
மகத்தான வெற்றி
2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில் மகத்தான வெற்றி அடைந்தோம். அதன் பிறகு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து மாநகராட்சிகளிலும் வெற்றி பெற்றதுடன் பெரும்பாலான நகராட்சிகளிலும் வெற்றி பெற்று ஒட்டு மொத்த உள்ளாட்சி தேர்தலிலும் மகத்தான வெற்றி பெற்றோம். நாடாளுமன்றத் தேர்தலில் யாரும் முறியடிக்க முடியாத வரலாற்றுச் சாதனையைப் படைத்தோம்.
எதிரிகளைக் காணவில்லை
இப்போது அரசியல் களத்தில் எதிரிகளை காணவில்லை. நம்முடைய பகைவர் எங்கோ மறைந்தார். காண்கின்ற இடங்களில் எல்லாம் மக்கள் தான். மக்களுக்கும் கண்முன் தெரிகின்ற ஒரே அரசியல் இயக்கம் அதிமுக தான்.
நன்மை செய்வோம்
நமது கட்சியின் ஒரே கொள்கை மக்களுக்கு நன்மை செய்வதாகும். ஒரே லட்சியம் மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருப்பதுதான்.
நம்மை வீழ்த்த யாருமில்லை
ஒற்றுபட்டால் உண்டு வாழ்வு-நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு. ஒற்றுமையாய் வாழ்வால் உண்டு நன்மையே, வேற்றுமையை வளர்ப்பதால் விளையும் தீமையே என்பதை நினைத்து, நாம் அனைவரும் ஒற்றுமையாய் இருந்து பணியாற்ற வேண்டும். அப்படிச் செய்தால், நம்மை வீழ்த்த யாரும் இல்லை.
வெற்றி மீது வெற்றி
வெற்றி மீது வெற்றி வந்து நம்மைச் சேரும். அதை வாங்கித் தந்த பெருமையெல்லாம் உங்களைச் (கட்சியினர்) சாரும் என்று முதல்வர் ஜெயலலிதா பேசினார்.