கருணாநிதியை காப்பாற்றுவது நம் கடமை: காரைக்குடியில் 'காது குத்திய' அழகிரி
காரைக்குடி: கருணாநிதியையும், தி.மு.க.வையும் நாம்தான் காப்பாற்ற வேண்டும் என்று காது குத்து விழாவில் பேசிய மு.க.அழகிரி, தனது ஆதரவாளர்களுக்கு அறிவரை வழங்கியுள்ளார்.
அவரவர் தங்களின் மனசாட்சிப்படி வாக்களியுங்கள் என்றும் அழகிரி கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, கன்னவனம் துரைராஜ் பேத்தி காதணி விழா இன்று அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பங்கேற்றுப் பேசியதாவது:
பதவி ஆசையில்லாதவர்கள்
காரைக்குடியில் கால் வைத்ததும் நினைவுக்கு வருவது முன்னாள் எம்.எல்.ஏ. சிதம்பரம்தான். 1972-ல் எம்.ஜி.ஆரை கழகத்தை விட்டு நீக்கியபோது தனிக்கட்சி தொடங்கினார். அப்போது சிதம்பரத்தை எம்.ஜி.ஆர். அழைத்தார். ஆனால் அவர் செல்லவில்லை.
என்னோடு இருப்பவர்கள் பதவிக்கு ஆசைப்படாதவர்கள். சோதனையான நேரத்திலும், தொண்டர்களை பார்த்து வருகிறேன்.
என் பிறந்தநாள் விழாவுக்கு போஸ்டர் அடித்து ஒட்டியதால் என் ஆதரவாளர்கள் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்கள். போஸ்டர் அடித்து ஒட்டியது குற்றமா? கருணாநிதியையும், திமுகவையும் காப்பாற்ற வேண்டும்.
எப்படி ஜெயிக்க முடியும்?
தேனியில் தி.மு.க.வினர் சிலர் என்னை சந்தித்ததால் 5 பொறுப்பாளர்கள் நீக்கப்பட்டனர். தேர்தல் நேரத்தில் ஒவ்வொருவரையும் இப்படி நீக்கினால் எப்படி வெற்றி பெற முடியும்?
பணம் கொடுத்தவர்கள் தி.மு.க.வில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள் கட்சி தேர்தலில் முறைகேடு நடந்ததாக தலைவர் தேர்தலை ஒத்தி வைத்தார்.
கார்த்தி சிதம்பரம் என் நண்பர்
இங்கு போட்டியிடும் கார்த்தி சிதம்பரம் எனது நண்பர்தான். அவரது தந்தை ப.சிதம்பரத்திடம் நான் மந்திரியாக இருந்தபோது துறைரீதியாக சில சந்தேகங்கள் கேட்பேன். எனக்கு சிதம்பரம் பாடம் நடத்துவார்.
எச்.ராஜாவும் நண்பர்தான்
அதுபோல எச்.ராஜாவும் என் நண்பர் தான். இந்த தேர்தலில் தி.மு.க. 3வது இடத்துக்கு வருவது கூட சந்தேகம்தான். நம்மை மதிக்காதவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். உங்கள் மனசாட்சிபடி நல்ல வேட்பாளர்களுக்கு ஓட்டு போடுங்கள் என்றார்.
ஆதரவாளர்களுடன் ஆலோசனை
முன்னதாக வியாழக்கிழமை மாலை மு.க.அழகிரி வீட்டில் அவரது ஆதரவாளர்கள் திரண்டனர். முன்னாள் எம்.எல்.ஏ. கவுஸ்பாட்சா, முன்னாள் துணைமேயர்கள் மன்னன், மிசா.பாண்டியன், முக்கிய ஆதரவாளர்களான உதயகுமார், சிவக்குமார், கோபிநாதன், முபாரக் மந்திரி, பூக்கடை ராமச்சந்திரன், வேல்முருகன் உள்பட பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பாஜக கூட்டணிக்கு ஆதரவு
நரேந்திரமோடி பிரதமராக வரவேண்டும், அதற்காக பா.ஜனதா கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்றும் அண்ணன் அழகிரி கூறியுள்ளார். அதன்படி மதுரை தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க.விற்கு ஆதரவாக களம் இறங்கவும், விருதுநகர், தேனி, தூத்துக்குடி தொகுதியில் ம.தி.மு.க.விற்கு ஆதரவாகவும் செயல்பட வேண்டும் என்றும், அழகிரி உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தனர்.
திண்டுக்கல், ராமநாதபுரம்
திண்டுக்கலில் தே.மு.தி.க., ராமநாதபுரம், கன்னியாகுமரி தொகுதிகளில் பாஜக , நெல்லையில் தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யவும் மு.க.அழகிரி உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.இதற்காக அவரது ஆதரவாளர்கள் தென் மாவட்டத்தில் அனைத்து இடங்களுக்கும் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
பல்டியடித்த அழகிரி
ஆனால் அவரவர் மனசாட்சிபடி வாக்களிக்க வேண்டுமென்று எனது ஆதரவாளர்களிடம் கூறியுள்ளேன். குறிப்பிட்டு எந்த கட்சிக்கும் வாக்களிக்க சொல்லவில்லை என்று . மு.க.அழகிரியின் பல்டியடித்துள்ளதால் ஆதரவாளர்கள் குழம்பித்தான் போயுள்ளனர்.
ஓட்டு போடுவாங்கதானே?
நாளுக்கு ஒரு பேச்சு... பொழுதுக்கு ஒரு பேச்சு என போகிற இடமெங்கும் காதுகுத்தி வருகிறார் மு.க. அழகிரி. எப்படியோ தேர்தலில் அழகிரி ஆதரவாளர்கள் யாருக்காவது ஓட்டு போட்டால் சரிதான்.