தமிழக மக்களுக்கு இந்த ‘லேடி’ வேண்டாம்... மோடிதான் வேண்டும்: விஜயகாந்த்
சென்னை: தமிழக மக்களின் நல்வாழ்வுக்கு இந்த லேடி வேண்டாம், மோடி தான் வேண்டும் என கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி, தமிழகத்தில் அதிமுக மற்றும் அதிமுக கட்சிகளை விமர்சித்துப் பேசினார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது பிரச்சாரத்தில் தமிழக சாதனைகளுக்குக் காரணம் இந்த லேடி தான் என தன்னைக் குறித்துப் பேசினார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
இந்நிலையில் நேற்று தனது கடைசி கட்டப் பிரச்சாரத்தை மேற்கொண்டார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் மாசிலாமணி, ஆலந்தூர் சட்டசபைத் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் ஏ.எம்.காமராஜா, ஆகியோரை ஆதரித்து நங்கநல்லூர் மார்கெட் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார் விஜயகாந்த்.
அப்போது அவர் பேசியதாவது:-
லேடி வேண்டாம்...
தமிழக மக்கள் நல்ல சவுகரியத்துடன் இருக்க இந்த லேடி வேண்டாம். மோடி தான் வேண்டும். இந்த லேடி மின்வெட்டு, குடிநீர் பிரச்சினைகளை தீர்க்கவில்லை.
எனக்கு மட்டும் சோதனை...
என்னை பல இடங்களில் சோதனை செய்கின்றனர். ஆனால் முதல் அமைச்சரின் ஹெலிகாப்டரை மட்டும் பார்த்துவிட்டு வருகின்றனர்.
சிந்தித்து பாருங்கள் மக்களே...
இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது. வாக்காளர்கள் சிந்தித்து பார்த்து வாக்களிக்க வேண்டும்.
மோசமான சாலைகள்....
தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தேன். அப்போது சாலைகள் மோசமாக இருந்தன.
எனது கோரிக்கை...
நான் மோடியிடம் ஒரு கோரிக்கை தந்தேன். அதில், குடிநீர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். சுத்தமான குடிநீர் கிடைக்கவேண்டும். நதிகளை இணைத்து விவசாயம் பெரும் வளர்ச்சி பெற்று அவர்களின் வாழ்வாதாரம் பெருக வேண்டும். தடையின்றி மின்சாரம் வழங்கி தொழில் உற்பத்தியை பெருக்கி வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். தமிழக மீனவர்களின் பிரச்சினைகளை நிரந்தரமாக தீர்க்க தீர்வு காணவேண்டும் என்று கூறினேன்.
மோடி தான் வேண்டும்....
இவை எல்லாம் நிறைவேற தமிழகத்திற்கு தற்போது மோடி தான் வேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.