பாஜக அணியில் மீண்டும் சேரவே மாட்டோம்: கருணாநிதி திட்டவட்டம்
சென்னை: பாஜக அணியில் மீண்டும் சேர மாட்டோம். மதசார்பற்ற ஒரு அரசு மத்தியில் அமர்வதுதான் எங்களுடைய குறிக்கோள் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1999ம் ஆண்டு பாஜக உடன் தி.மு.க. கூட்டணி அமைத்ததை முதல்வர் ஜெயலலிதா அடிக்கடி குறிப்பிடுகிறார்.
1998ம் ஆண்டு பா.ஜனதாவுடன் மத்திய அரசில் பங்கேற்ற ஜெயலலிதா தி.மு.க. ஆட்சியை கலைக்க வேண்டும் என்று அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாயிடம் வேண்டுகோள் விடுத்தார். அது நடைபெறாத நிலையில் பாஜகவுக்கான ஆதரவை திடீரென்று அ.தி.மு.க. விலக்கிக் கொண்டது.
பாஜக ஆட்சி கவிழ்ந்த பிறகு 1999ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணியுடன் சேர்ந்து போட்டியிட்டோம். அப்போது சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த அனைத்து சகோதர, சகோதரிகளுடனும் நேசக்கரம் நீட்டுவோம் என்று உறுதிமொழி பெற்ற பிறகே பா.ஜனதாவுடன் இணைந்து தேர்தலை சந்தித்தோம்.
ஆனால், தி.மு.க.வின் கொள்கைக்கு மாறாக பா.ஜனதா கூட்டணி செயல் பட தொடங்கிய போது அந்த கூட்டணியில் இருந்து விலகினோம்.
தற்போதைய நிலையில் பாஜக அணியில் மீண்டும் சேர மாட்டோம். மதசார் பற்ற ஒரு அரசு மத்தியில் அமர்வதுதான் எங்களுடைய குறிக்கோள் என்று கூறி வருகிறோம். இதில் இருந்தே தி.மு.கவின் நிலைப்பாட்டை புரிந்து கொள்ளலாம் என்று கருணாநிதி கூறியுள்ளார்.