இடைத்தேர்தலில் வன்முறை: அதிமுகவினருக்கு பாடம் புகட்டுவோம்- தமிழிசை சவுந்தரராஜன்
சென்னை: உள்ளாட்சி இடைத்தேர்தலில் வன்முறையை கட்டவிழ்த்து விட்ட அதிமுகவினருக்கும், அதை கண்டும் காணாமல் விட்ட தேர்தல் ஆணையத்திற்கும் பாடம் புகட்டுவோம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், துாத்துக்குடியிலும், கோவையிலும் நடந்த மாநகராட்சி மேயர் இடைத்தேர்தலில் தேர்தலில், பா.ஜ.க வேட்பாளர்களுக்கு, குறைந்த எண்ணிக்கையில் கூட, ஓட்டுகள் விழுந்து விடக் கூடாது என, முடிவெடுத்து, அ.தி.முக.,வினர்.கள்ள ஓட்டு போட்டிருக்கின்றனர் என்றார்.
அடித்து உதைத்தனர்
துாத்துக்குடியில், தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அமைச்சர்களே முன்னின்று, கள்ள ஓட்டுப் போட்டிருக்கின்றனர். இதை தட்டிக் கேட்ட, எங்கள் வேட்பாளர் ஜெயலட்சுமியையும், கணவரையும், கட்சியினரையும், அ.தி.மு.க.,வினர் அடித்து உதைத்திருக்கின்றனர்.
வேட்பாளர் பாதிப்பு
இதில், கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் எங்கள் வேட்பாளர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
மேயர் வேட்பாளர் மீது தாக்குதல்
ஜனநாயகத்தை காலில் போட்டு மிதித்து விட்டு, ஆளுங்கட்சியினர், இப்படியொரு தேர்தலை நடத்த வேண்டுமா என்பது தான், பாஜகவின் கேள்வி.கோவையில், எங்கள் வேட்பாளர் நந்தகுமாரை, முன்னதாகவே அ.தி.மு.க.,வினர் வெளியூர்காரர்கள் உதவியுடன் தாக்கியிருக்கின்றனர். இருந்தும், எங்கள் வேட்பாளர், அவர்களுடைய அராஜகத்தை தட்டிக் கேட்டிருக்கிறார்.
போலீஸ் துணையோடு
வாக்குப்பதிவு நாளிலும், அவரை எங்கும் செல்ல விடாமல் தடுத்திருக்கின்றனர். கவுண்டம்பாளையத்தில், ஓட்டுச்சாவடியை கைப்பற்றி, ஓட்டுகள் முழுவதையும், அ.தி.மு.க.,வினர், அவர்களுக்கே போட்டுக் கொண்டனர். கோவையில், பா.ஜ.,வுக்கு பலமான பகுதிகளாக அறியப்பட்ட, அத்தனை 'பூத்'களையும், தேர்தல் அதிகாரிகள், போலீஸ் துணையுடனும், ஆளுங்கட்சியினர் ஓட்டுப் போட்டிருக்கின்றனர்.
தூத்துக்குடியில் கலவரம்
துாத்துக்குடியில், வாக்காளர் அடையாள அட்டை போல, ஒரு அட்டையை அ.தி.மு.க.,வினருக்கு அச்சடித்து கொடுத்திருக்கின்றனர். அந்த அட்டையில், முதல்வர் படம் அச்சிடப்பட்டிருக்கிறது. அதை பூத்திற்கு வந்து காண்பித்ததும், போலீசும், தேர்தல் அலுவலர்களும், அவர்களை எந்த கேள்வியும் கேட்காமல், உள்ளே அனுமதித்து உள்ளனர். அவர்கள், பூத்திற்குள் சென்று, அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளித்து இருக்கின்றனர்.
பாஜக தொண்டர்கள் கைது
சென்னை கொடுங்கையூரில், கும்பலாக வந்த அ.தி.மு.க.,வினர், பாஜகவினரை விரட்டி அடித்து விட்டு, இஷ்டத்துக்கு ஓட்டு போட்டிருக்கின்றனர். இதை எதிர்த்து, காலை முதல் மாலை வரை, சாலை மறியல் நடந்தது. அதில், 500 பாஜக தொண்டர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
தேர்தல் அதிகாரிகள்
ராமநாதபுரத்தில், ஓட்டுச்சாவடிக்குள் வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் அனுமதிக்கின்றனர் எனச் சொல்லி, தேர்தல் கமிஷனில் எங்கள் கட்சித் தலைவர்கள் புகார் கொடுத்தனர். உடனே, அதிகாரிகளை ஸ்பாட்டுக்கு அனுப்புகிறோம்' என்று, தேர்தல் கமிஷனில் சொல்லியிருக்கின்றனர். ஆனால், மாலையில் ஓட்டுப்பதிவு முடியும் வரை, எந்த அதிகாரியும் ஓட்டுச்சாவடிக்கு வரவில்லை.
நீதிமன்ற உத்தரவு
நேர்மாறாக இப்படியெல்லாம் தேர்தல் அராஜகமாக நடக்கிறது என, நாங்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டோம். அவ்வழக்கில், நீதிமன்றம், தேர்தலை முறையாக, நியாயமாக, நேர்மையாக தேர்தல் கமிஷன் நடத்த வேண்டும் என, உத்தரவிட்டது.ஆனால், அதற்கு நேர்மாறாக, தேர்தல் நடந்திருக்கிறது. அதாவது, முழுமையாக நீதிமன்ற உத்தரவை, தேர்தல் கமிஷன் மீறி இருக்கிறது. இதனால்,நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க இருக்கிறோம்.
ஆளுங்கட்சியினர் அராஜகம்
முக்கியத்துவம் வாய்ந்த இந்த தேர்தலை, வன்முறை, அராஜகம், நியாமில்லாத் தன்மை போன்றவற்றை காட்டி, எதிர்க்கட்சிகள் புறக்கணித்தது தவறு. அது தான், ஆளுங்கட்சியினர் அராஜகம் செய்வதற்கு வசதியாகிவிட்டது. கூட்டமாக இருந்து, ஆளும் தரப்பை எதிர்த்திருந்தால், இந்தளவுக்கு அராஜகம் நடந்திருக்காது. தேர்தலில் வன்முறைக்கும், அராஜகத்துக்கும் வித்திட்ட அரசுக்கும், தேர்தல் கமிஷனுக்கும், தகுந்த பாடம் புகட்டாமல் ஓயமாட்டோம்.இவ்வாறு, அவர் கூறினார்.