தமிழக தேர்தல்களில் முதன்முறையாக... 17684 பூத்களிலிருந்து தேர்தல் காட்சிகள் லைவ்...
சென்னை: வாக்காளர்களின் வசதிக்காக வீட்டில் இருந்தபடியே தேர்தலை ஆன்லைனில் பார்க்கும் வசதியை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தித் தந்துள்ளது.
பொதுவாக வாக்குச்சாவடிக்குள் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே சென்று வர அனுமதி உண்டு. இதனால் பெரும்பாலான நேரங்களில் கள்ள ஓட்டு போடப் படுவதாகவும், தங்களுக்கு சாதகமானவர்களை மட்டும் உள்ளே அனுமதிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுவதுண்டு.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து கள்ள ஒட்டு புகார் குறைந்துள்ளது. ஆனபோதும், தேர்தல் நேர்மையான முறையில் நடைபெறுகிறது என்பதை வாக்காளர்கள் நேரில் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் தேர்தல் ஆணையம் இணைய தளம் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்ய முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :-
முதல்கட்டமாக...
தமிழகத்தில் மொத்தம் 60817 வாக்குச் சாவடிகள் உள்ளன. அவற்றில் முதல்கட்டமாக 17684 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா பொருத்தப்பட உள்ளது.
இது தான் அந்த வெப்சைட்...
அதன் மூலம் வாக்குப்பதிவு காட்சிகள் நேரடியாக பதிவு செய்யப்படும். அதனை public.gelsws.in என்ற இணையதள முகவரியில் மக்கள் நேரடியாக பார்க்கலாம்.
தேர்தல் நாளன்று...
இந்த வசதி லோக்சபா தேர்தல் நாளான நாளை மறுநாள் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பமானது முதற்கொண்டு காணக் கிடைக்கும்.
பெயர் பதிவு...
இந்த வசதியைப் பெற விரும்பும் வாக்காளர்கள் தங்களது பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை முதலில் அந்த இணைய தளப் பக்கத்தில் பதிவு செய்ய வேண்டும்.
எஸ்.எம்.எஸ்...
அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வரும், அதில் அவர்களது ரகசிய குறியீடு மற்றும் பெயர் இடம்பெற்றிருக்கும். அதனைப் பயன்படுத்தி வாக்காளர்கள் நேரடியாக வாக்குப்பதிவைப் பார்வையிடலாம்.
இரண்டு வாக்குச் சாவடிகள்...
அதேபோல், வாக்காளர்கள் ஒரே நேரத்தில் இரண்டு வாக்குச்சாவடிகளை மேற்கூறிய முறையில் பார்க்க முடியும். ஒரு நிமிட இடைவெளியில் அந்தக் காட்சிகள் மாறிக் கொண்டே இருக்கும்.
மீண்டும் லாகின்....
மேற்கூறிய வழிமுறைகள் பத்து நிமிடங்களுக்கு மட்டுமே பொருந்தும். பின்னர் மீண்டும் பார்க்க முன்கூறிய வழிமுறைகளை மீண்டும் மேற்கொள்ள வேண்டும்' என இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.