மோடி வந்தா அதை செய்வார், இதை செய்வாருன்னு சொன்னீங்களே.. இப்போ என்ன ஆச்சு?: வீரமணி
சென்னை: நரேந்திரமோடி ஆட்சிக்கு வந்தா நிலைமை அப்படியே தலைகீழா மாறும் அப்படீன்னு சொன்னீங்களே.... இப்போ எப்படி ஆயிடுச்சு பார்த்தீர்களா..? என்று கேட்டுள்ள திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, மத்திய அரசின் தமிழர் எதிர்ப்பாடு நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஆதி தமிழர்
இலங்கையின் ஆதிகாலம் தொட்டே இருந்து வந்த மண்ணின் மைந்தர்கள்தான் ஈழத்தமிழர்கள். கிபி. ஏழாம் நூற்றாண்டிற்குப் பிறகு, ஒடிசா மற்றும் பல பகுதிகளிலிருந்து சென்ற ஆரியர்களின் வம்சாவளிகளால் ஏற்பட்ட கலப்புக் காரணமாக, சிங்களர் என்ற ஒரு இனத்தோற்றம் உருவானது என்பது வரலாறு.
பிரிக்கப்பட்டனர்
அங்கே நாளடைவில் அவர்கள் பெருகினர். ஈழத் தமிழர்களாகிய மண்ணின் மைந்தர்கள், வடக்கே ஒரு பகுதி, கிழக்கே மற்றொரு பகுதி என ஒதுக்கிவிடப்பட்டு வாழ்ந்துவந்தனர். தலைநகர் கொழும்பில், இந்தியாவிலிருந்து குடியேறிய வாணிபத் தொடர்புத் தமிழர்கள் அதிகம் இருந்தனர். தேயிலைத் தோட்டங்களில் வேலை பார்த்தவர்கள் "கூலிக்கார" தமிழர்கள் ஆக்கப்பட்டனர்.
இன அழிப்பு போர் குற்றம்
நாட்டின் சொந்தக் குடிமக்களான தமிழர்களை அழித்தொழிக்கும் இன அழிவுப் படுகொலையில் தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்று உலக நாடுகளின் கண்களில் மிளகாய்ப் பொடி தூவிவிட்டு கொத்துக் குண்டுகளைப் போட்டு தமிழினத்தை கொத்துக் கொத்தாய் அழித்த கொடுமை காரணமாகவே ஐ.நா.வின் பெரும்பான்மை நாடுகள் இலங்கை அதிபரை போர்க் குற்றவாளியாக அறிவித்து, விசாரணை மேற்கொண்டுள்ளதற்குக் காரணம்.
விசாரணை துவக்கம்
கொடுமைகளை கண்டித்து உண்மைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளி வரத் தொடங்கியதால், ஐ.நா. சபை, இலங்கையை போர்க் குற்றம் புரிந்த நாடாக அறிவித்து, விசாரணையைத் தொடங்கியுள்ளது. இதனை வற்புறுத்திய தீர்மானத்திற்கு ஆதரவாக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்காவில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் தொப்புள் கொடி உறவு, ஈழத் தமிழர்களோடு உண்டு என்பதையும் மறந்து விட்ட முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, நடுநிலை வகிக்கிறோம் என்ற நிலைப்பாட்டினை அறிவித்தது; தமிழ்நாட்டுத் தமிழர்களிலிருந்து உலகத் தமிழர்கள் அனைவரது கண்டனத்திற்கும்கூட ஆளானது.
நொடி பொழுதில் மோடி தீர்ப்பாரா?
பொதுத் தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக ஈழப் பிரச்சினையில் தீர்வை, மோடி ஆட்சிக்கு வந்தால் ஒரு நொடியில் கண்டு விடுவார் என்பதுபோலவும், தமிழ்நாட்டு மீனவர்களைச் சிறைப் பிடிப்பது, சித்ரவதை செய்வது, அவர்களது மீன்பிடி படகுகள், வலைகளை அபகரிப்பது போன்ற அவலங்களுக்கு உடனே முற்றுப் புள்ளி வைத்து விடுவார் மோடி என்றும் தொடர்ந்து பிரச்சாரம் செய்ததை தமிழ் நாட்டு அப்பாவித் தமிழர்கள் கேட்டு வாக்களித்தனர். பெரிதும் நம்பிக்கையும் வைத்தனர். 50 நாள்களுக்கு மேல் ஆகிய நிலையில் மோடி தலைமையிலான புதிய மத்திய அரசின் நிலைப்பாடு முந்தைய நிலைப்பாட்டிலிருந்து சற்றும் மாறுபடாத "பழைய கறுப்பனாகவே" இருக்கிறது!
பகிரங்க அறிவிப்பு
ஜி.எல். பெரிஸ் என்ற இலங்கை அரசின் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு டெல்லி சிவப்பு கம்பள வரவேற்பு தந்துள்ள நிலையில், நமது வெளியுறவுத் துறை அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜ் அம்மையார் தரப்பில், போர்க் குற்றவாளி நாடாக இலங்கையை ஐ.நா. மனித உரிமை ஆணையம் விசாரிப்பது கூடாது என்று பகிரங்கமாக நேற்று அறிவித்திருப்பது எதைக் காட்டுகிறது!
கூட்டணி கட்சிகள் நிலை என்ன?
ஏதோ, பெரிய மாற்றம் ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினையில் வரும் என்று தமிழ்நாட்டில் உள்ள தே.மு.தி.க. பா.ம.க., ம.தி.மு.க. இன்னும் சில சிறு கட்சிகளும் தேர்தல் மேடைகளில் முழங்கினார்களே, அவர்கள் நிலைப்பாடு இப்போது என்ன? மாலையில் வந்த குடு குடுப்பைக்காரர்கள் காலையில் காணாமற் போவது போன்றது தானா?
தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?
இப்பிரச்சினையில், இப்படி இலங்கையைப் போர்க் குற்றவாளி நாடாகக் கருதி ஐ.நா. மனித உரிமை ஆணையக்குழுவின் விசாரணை கூடாது என்ற இலங்கை அரசின் நிலைப்பாட்டை அப்படியே 100 சதவிகிதம் ஏற்கிற இன்றைய மத்திய அரசின் நிலைப்பாட்டை தமிழக முதல் அமைச்சர் தமிழக அரசு ஏற்கிறதா? எதிர்க்கிறதா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். தேர்தல் முடிவுகளால் மாற்றம் வரும் என்று கனவு கண்டவர்கள் இப்போது சந்திப்பது மாற்றம் அல்ல; ஏமாற்றமே!
மயக்கம் கலையட்டும் தமிழா!
தமிழர்கள் - ஈழத் தமிழர்கள், தமிழ்நாட்டுத் தமிழர்கள், உலகத் தமிழர்கள் அனைவரும் இனியாவது ‘மயக்கம்' கலைந்து உண்மைகளை உணர வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.