மிகவும் பின் தங்கிய தர்மபுரி தொகுதி வாக்குப் பதிவில் முந்திய பின்னணி..
தர்மபுரி: தமிழ்நாட்டிலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டம் என்ற பெயரைக் கொண்ட தருமபுரி மாவட்டத்தில்தான் லோக்சபா தேர்தலில் மிக அதிகபட்ச வாக்குகள் பதிவாகியுள்ளன.
நேற்றைய தேர்தலில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் அதிக பட்சமாக 81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்த தொகுதியில் வாக்குப்பதிவு அதிகரித்ததன் பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அன்புமணி ராமதாஸ்
தர்மபுரி தொகுதியில் பாமக சார்பில் நட்சத்திர வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து ஊடகங்களின் கவனம் தர்மபுரி மீது திரும்பியது. இவர் போட்டியிடும் முதல் தேர்தல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதிரடி முற்றுகை
அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளும் பாமகவை தோற்கடிக்க களம் இறங்கி அனைத்து வியூகங்களையும் வகுத்து பிரசாரம் மேற்கொண்டனர்.
கூட்டணி பலத்தில் அன்புமணி
பாஜக கூட்டணி பலத்தில் களமிறங்கிய அன்புமணி பட்டி தொட்டி எங்கும் பயணம் மேற்கொண்டார். மகனுக்காக டாக்டர் ராமதாஸ் திண்ணை பிரசாரம் செய்தார்.
மாற்றத்தை விரும்பும் மக்கள்
2011ம் ஆண்டு கணக்கெடுப்புப்படி தருமபுரி மாவட்டம் கல்வியில் தமிழக அளவில் 32வது இடத்தில் உள்ளது. தொழில் வாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி, கல்வி வளர்ச்சி ஆகியவை குறித்த ஏக்கம் தொகுதி மக்களிடம் பெரிய அளவில் இருந்தது. அந்த முன்னேற்றத்தை விரும்பும் மக்களின் தாக்கம்தான் வாக்கு சதவீதம் அதிகரிக்கக் காரணம் என்று கூறியுள்ளார் தருமபுரியைச் சேர்ந்த கல்வியாளர் ஹரிகிருஷ்ணன்.
விஜயகாந்த் – அன்புமணி
அன்புமணிக்காக பிரசாரம் செய்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மோடி பிரதமராவது பற்றியும், அன்புமணி ராமதாஸ் அமைச்சராவது பற்றியும் பேசினார். அன்புமணி பிரசாரம் செய்த இடங்களில் எல்லாம் மோடியைப் பற்றியே பேசினார்.
கலவரம் பாதிப்பின் எதிரொலி
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் முக்கிய காரணம், இந்த மாவட்டத்தில் நடந்த ஜாதிக் கலவரம். தருமபுரியில் கடந்த 2012-ம் ஆண்டு காதல் கலப்பு திருமண விவகாரத்தில் 3 கிராமங்கள் கொளுத்தப்பட்டன. வன்னியர், தலித் இரு பெரும் சமூகத்தினரிடமும் பரஸ்பரம் நீருபூத்த நெருப்பாக வெறுப்புணர்வை ஏற்படுத்தி வைத்திருந்தது. வெளிப்படையாக தெரியாவிட்டாலும், இரு சமூகத்தினரும் இப்பிரச்சினையை சவாலாக எடுத்துக்கொண்டு தேர்தலை எதிர்கொண்டனர். இதனால் தான் வாக்குப் பதிவு மிக மிக அதிகமாக இருந்ததாக் கருதப்படுகிறது.