என்கவுன்டர் வழக்கில் அமித்ஷாவை காப்பாற்றிய சதாசிவத்துக்கு கவர்னர் பதவி!!
சென்னை: குஜராத் போலி என்கவுன்டர் வழக்கில் பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷாவை காப்பாற்றியதற்காகவே உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவத்துக்கு மத்திய அரசு ஆளுநர் பதவி வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
குஜராத்தில் நடைபெற்ற போலி என்கவுன்டர்களில் துளசிராம் பிரஜாபதி வழக்கும் ஒன்று. கடந்த 2005ம் ஆண்டில் சொராபுத்தீன், அவரது மனைவி கவுசர் பீ மற்றும் துளசிராம் பிரஜாபதி ஆகியோர் ஆந்திராவில் இருந்து குஜராத் போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இவர்கள் தீவிரவாதிகள் என்றும், குஜராத்தின் அப்போதைய முதல்வரான மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களை கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டதாகவும் கூறி சொராபுத்தீன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
துளிசராம் கொலை
இக்கொலையை பார்த்த ஒரே சாட்சியான துளசிராம் பிரஜாபதியும் 2006ம் ஆண்டில் போலீசாரால் கொலை செய்யப்பட்டார். இந்த போலி என்கவுன்ட்டர்கள் குறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி நரேந்திர மோடியின் வலது கரமான அமித் ஷாவை 2010ம் ஆண்டு ஜுலை 25ம் தேதி கைது செய்தது.
தனி வழக்கு
3 மாதம் சிறையில் இருந்த அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த விவகாரம் தொடர்பாக அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் 2011ஆம் ஆண்டு பிரஜாபதி என்கவுன்ட்டரை தனிவழக்காக எடுத்து சிபிஐ தரப்பில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
அமித்ஷா மீது குற்றப்பத்திரிகை
இதன் அடிப்படையில் 2013ஆம் ஆண்டு செப்டம்பர் 4-ந் தேதி அமித்ஷா உள்ளிட்டோர் மீதான குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
தனி வழக்காக மாற்ற எதிர்ப்பு
ஆனால் அமித்ஷா தரப்பு இதனை கடுமையாக எதிர்த்தது. சொராபுத்தீன் என்கவுன்டர் வழக்கும் துளசிராம் பிரஜாபதி வழக்கும் ஒன்றுடன் தொடர்புடையது. இதனை தனி வழக்காக மாற்றி எப்.ஐ.ஆர். பதிவு செய்ததை செல்லாது என்று அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்துக்குப் போனது அமித்ஷா தரப்பு.
அமித்ஷாவுக்கு ஆதரவாக தீர்ப்பு
இந்த வழக்கை கடந்த ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சதாசிவம் மற்றும் நீதிபதி சவுகான் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. இந்த விசாரணையின் முடிவில் அமித்ஷாவுக்கு எதிராக புதியதாக போடப்பட்ட எப்.ஐ.ஆரை சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் அதிரடியாக ரத்து செய்தது.
கைதில் இருந்து தப்பிய அமித்ஷா
இதன் மூலம் துளசிராம் பிரஜாபதி வழக்கில் அமித்ஷா கைதாவதில் இருந்து தப்பித்தார். ஏற்கெனவே அமித்ஷாவுக்காக உச்சநீதிமன்றத்தில் வாதாடிய யு.யு.லலித், உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ஆளுநர் பதவி
தற்போது அமித்ஷா கைதாவதில் இருந்து தப்பிக்க உதவினார் என்பதற்காக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவத்துக்கு ஆளுநர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.