புதுச்சேரி பிரசாரத்தை கேன்சல் செய்த விஜயகாந்த்: பின்னணியில் பாமக!
சென்னை: உடல்நிலையைக் காரணம் காட்டி புதுச்சேரி தேர்தல் பிரசாரத்தை விஜயகாந்த் ரத்து செய்தாலும் அதன் பின்னணியில் பாமகவினரின்தான் உள்ளதாக கூறப்படுகிறது.
புதுவை லோக்சபா தொகுதியில் பாமக வேட்பாளருக்கு ஆதரவு அளித்துள்ளது தேமுதிக. கடந்த 18ம் தேதி கள்ளக்குறிச்சி பிரசாரத்தை முடித்துக்கொண்டு, புதுச்சேரி சென்றிருக்க வேண்டும்.
ஆனால் அங்கே போகாமல் சென்னைக்கே வண்டியை திருப்பிவிட்டார் விஜயகாந்த். அதற்கு காரணம் வட மாவட்டங்களில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களுக்கு பாமகவினரின் சரியான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்பதுதானாம்.
தேமுதிக வேட்பாளர்கள்
சேலம், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம்,திருவள்ளூர், வடசென்னை, மத்திய சென்னை ஆகிய தொகுதிகளில் தேமுதிக போட்டியிடுகிறது. ஆனால் இதுவரை பாமகவினர் எந்த வித வேலையும் செய்யவில்லையாம்.
சேலத்தில் அருள் ஆப்பு
சேலம் தொகுதியில் சுதீஷ்க்கு எதிராக பாமக முன்னாள் வேட்பாளர் அருள் உள்குத்து வேலையில் ஈடுபடுவதாக தகவல் வெளியானது.
டென்சன் விஜயகாந்த்
இந்த தகவல் கள்ளக்குறிச்சியில் பிரசாரத்தில் விஜயகாந்த் காதுக்கு எட்டவே டென்சன் ஆனார் விஜயகாந்த்.
டாக்டர் நிலை என்ன?
உடனே சுதீஷ்க்கு போன் போட்ட விஜயகாந்த், டாக்டர் என்ன மனநிலையில் இருக்கிறார் என்று கேட்டுச் எனக்குச் சொல், நாமும் ஒரு முடிவுக்கு வரணும் என்று சொல்லிவிட்டு சென்னை திரும்பிவிட்டாராம்.
அன்புமணி அப்செட்
இந்த தகவல் அன்புமணிக்கு போய் அவர், பதில் சொல்வதற்குள், விஜயகாந்த் சென்னை திரும்பிவிடவே, தைலாபுரம் தோட்டத்தில் கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக பாஜக கூட்டணிக்கு ஆதரவு அறிக்கை விட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ்.
பாட்டாளி பங்காளிகள்
டாக்டரின் அறிக்கைக்குப் பின்னரும் தேமுதிக மேடையில் பாட்டாளி பங்காளிகள் ஏறியதாக காணவில்லை.
வைராக்கிய டாக்டர்
தேமுதிக மேடை மட்டுமல்ல... பாஜக கூட்டணிக்காக ஒருபோதும் மேடை ஏறமாட்டேன் என்ற வைராக்கியத்தை டாக்டர் விடவில்லை என்றே தெரிகிறது.
வைகோ அழைப்பு
கிருஷ்ணகிரியில் டாக்டர் ராமதாஸை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனியாக சந்தித்து அழைப்பு விடுத்தார். ஆனாலும் பிடி கொடுக்கவில்லை ராமதாஸ். இதனால் பாஜக, மதிமுக வேட்பாளர்களும் திணறுகின்றனர் என்றே தெரிகிறது.
குழி தோண்டும் பாமக
விஜயகாந்த் கட்சி வேட்பாளர்கள் ஒரு இடத்தில் கூட ஜெயிக்கக் கூடாது என்பது ஆளுங்கட்சியின் அசைன்மென்ட். ஆனால் அதற்கு வேலையே இல்லாமல், பாமகவினரே அந்த வேலையை செய்கின்றனர் என்றும் கூறப்படுகிறது.
நொந்துபோன விஜயகாந்த்
எனவேதான் விஜயகாந்த் மனம் நொந்து போய், புதுச்சேரியில் பாமகவிற்கு ஆதரவு கொடுத்தும் பிரசாரம் செய்யப் போகவில்லை என்று கூறப்படுகிறது.