மருத்துவமனைக்கு மீண்டும் வந்த இறந்தவர் உடல்- சாவில் மர்மம் இருப்பதாக மனைவி சந்தேகம்!
சேலம்: சேலத்தில் அரசு மருத்துவமனையில் இறந்தவரின் உடலானது மறுபடியும் அதே மருத்துவமனைக்கு திரும்பி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் ஜாகீர்ரெட்டிப்பட்டி காலனியைச் சேர்ந்தவர் "புல்லட்" பெருமாள். இவர் சில ஆண்டுகளாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை மனைவி தமிழ்செல்வியும், மகள்களும், உறவினர்களும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்நிலையில் நேற்று காலை பெருமாள் திடீரென உயிரிழந்தார். மருத்துவமனை நிர்வாகமும் உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்ல அனுமதி வழங்கியது. இறுதி சடங்குக்கான பணிகள் நடந்து கொண்டிருந்த நிலையில் தன்னுடைய கணவர் சாவில் மர்மம் இருப்பதாக கூறி சூரமங்கலம் போலீஸில் தமிழ்செல்வி புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் குமரேசன் விசாரணை நடத்தி பெருமாளின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக மீண்டும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.