கள்ளக்காதலுக்காக என்னை ஒதுக்குகிறார்... சென்னையில் கணவன் வீட்டு முன்பு மனைவி தர்ணா!
சென்னை: கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி கணவர் வீட்டு முன்பு இளம்பெண் தர்ணா போராட்டம் நடத்திய சம்பவம் சென்னை பெரம்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை பெரம்பூர், பன்னீர்செல்வம் 4வது தெருவைச் சேர்ந்தவர் கங்காதரன் (28). இவருடைய மனைவி சுகன்யா (22). இவர்களுக்கு ஓராண்டுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. திருமணமானவுடன் சுகன்யா கர்ப்பம் தரித்தார்.
தகராறு
ஆனால் துரதிருஷ்டவசமாக கடந்த மாதம் சுகன்யாவுக்கு பெண் குழந்தை பிறந்து இறந்து விட்டது. குழந்தை இறந்த துக்கத்தினாலும், குழந்தையை சரிவர பேணவில்லை என்ற கோபத்தாலும், சுகன்யா மீது கங்காதரனுக்கு கோபம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
வீட்டைவிட்டு விரட்டினார்
சில வாரங்களுக்கு முன்பு இருவருக்கும் தகராறு முற்றி பெரும் வாக்குவாதமாக வெடித்தது. இதையடுத்து இனிமேல் இந்த வீட்டில் உனக்கு இடமில்லை என்று கூறி, கங்காதரன், தனது மனைவி சுகன்யாவை வீட்டில் இருந்து வெளியே அனுப்பினார்.
போலீசில் புகார்
இதனால் கோபமடைந்த சுகன்யா, பெரம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் தலையிட்டு கணவன், மனைவி இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து வைத்து அனுப்பினர். அதன்பிறகு இருவரும் சிறிது நாட்கள் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
வீட்டுக்கு எதிரே தர்ணா
இந்நிலையில் நேற்று அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கங்காதரன், சுகன்யாவை வீட்டில் இருந்து மீண்டும் வெளியே அனுப்பிவிட்டார். மனமுடைந்த சுகன்யா, தன்னை கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி தனது உறவினர்கள் 2 பேருடன் கணவர் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் குதித்தார்.
கள்ளத்தொடர்பா?
தகவல் அறிந்ததும் பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சுகன்யாவை சமாதானம் செய்தனர். எனது கணவருக்கும், அயனாவரத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ள தொடர்பு உள்ளது. அவளுடன் சேர்ந்து வாழவே என்னை புறக்கணிக்கிறார். எப்படியாவது என்னை கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று போலீசாரிடம் சுகன்யா தெரிவித்தார்.
போலீசார் தலையீட்டால் தர்ணாவை கைவிட்டார் சுகன்யா. இது தொடர்பாக கங்காதரனிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.