பிரிவை தாங்கமுடியாமல் மனைவியின் உடல் மீதே விழுந்து தானும் உயிர் விட்ட கணவர்
கிருஷ்ணகிரி: இறந்த மனைவியின் இறுதிச்சடங்கு நடைபெற்ற போது,தனது மனைவியின் உடல் மீது விழுந்து அவரது கணவர் உயிர்விட்ட சம்பவம் அனைவரையும் கண்ணீரில் மூழ்கடித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட் டம் மத்தூர் அருகே ஒட்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வேடியப்பன் . இவரது மனைவி சரஸ்வதி . இவர்களுக்கு தேவி , காந்தி என்ற 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 3 ஆண்டுக்கு முன்பு சரஸ்வதிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை.
இந்த நிலையில் உடல் நிலை கவலைக்கிடமான சரஸ்வதி நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் நேற்று நடந்தது. மனைவியின் உடல் அருகே வேடியப்பன் துக்கம் தாங்காமல் அழுத வண்ணம் இருந்தார். அப்போது திடீரென்று சரஸ்வதியின் உடல் மீது வேடியப்பன் விழுந்து கதறினார்.
அதன்பின்னர், அவர் எழுந்திருக்கவில்லை. இதனால் பதறிப்போன உறவினர்கள் அருகே சென்று பார்த்தபோது வேடியப்பன் உயிர் இழந்ததை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.
கல்யாணம் ஆன பத்து நாட்களில் விவாகரத்து கேட்கும் தம்பதிகளுக்கு இடையில், மனைவி இறந்த அதிர்ச்சி தாங்க இயலாமல் தானும் இறந்த கணவன் என்ற இந்த ஆதர்ச தம்பதிகளை நினைத்து பெருமைப்படுவதா,வருத்தப்படுவதா என உறவினர்கள் தவித்து வருகின்றனர்.