தற்கொலை செய்யக் கூவத்தில் குதித்த கணவர் – காப்பாற்ற போய் சேற்றில் மாட்டிய மனைவி!
சென்னை: சென்னையில் கூவத்தில் குதித்து தற்கொலை செய்யச் சென்ற கணவரைக் காப்பாற்ற சென்ற மனைவியும் சேற்றில் சிக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூலக்கொத்தளத்தை சேர்ந்தவர் ஆனந்த் என்ற கூலித் தொழிலாளி. இவரது மனைவி தேவி. கணவரின் குடிப்பழக்கம் காரணமாக ஆனந்த் மற்றும் தேவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று மீண்டும் ஆனந்த் குடித்து விட்டு வந்தார்.
இதனால் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆனந்த் கூவத்தில் குதித்து தற்கொலை செய்யப்போவதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்றார்.
கணவரைத் தேடி தேவியும் பின்னால் சென்றார். அப்போது ஆனந்த் அருகில் உள்ள கூவம் ஆற்றில் குதித்தார். அவரை காப்பாற்றுவதற்காக தேவியும் கூவத்தில் குதித்தார்.
அப்போது தேவி சகதியில் சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடினார். சத்தம் கேட்டு ஏராளமானோர் அங்கு கூடினார்கள். இதற்குள் ஆனந்த் தண்ணீரில் இருந்து கரையேறி தப்பி ஓடினார்.
சம்பவம் குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கொண்டித்தோப்பு தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தேவியை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தப்பி ஓடிய ஆனந்தை தேடி வருகிறார்கள்.