ஒசூர், கோவை அருகே யானை தாக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்
சென்னை: யானை தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் அளிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த மே மாதம் 9ம்தேதி கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், நெருப்புக்குட்டை கிராமத்தை சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மனைவி சரோஜா, அம்மாதம் 10ம்தேதி, கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் வனச்சரகம், சானமாவு காப்புக் காட்டிற்கு அருகே ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், மிட்டாமீடிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடசுப்பு ரெட்டி என்பவரின் மகன் வெங்கட்ட ரெட்டி ஆகியோர் காட்டு யானைகள் தாக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும்,
மே மாதம் 17ம்தேதி, கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை வட்டம், அய்யர்பாடி தேயிலைத் தோட்டம் அருகே காட்டெருமை தாக்கியதில் அய்யர்பாடி பகுதியை சேர்ந்த வீரன் என்பவரின் மகன் சோமசுந்தரம் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
இந்த துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வனத்துறை மூலம் தலா 3 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.